மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரையே இன்று பின்னுக்கு தள்ளி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தை கர்நாடகா தேர்தல் முடிவு பெற்றுள்ளது. மொத்தம் 224 உள்ள தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளிலும் பாஜக 65 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக வெளிப்படையாக கருத்து சொல்ல மாட்டார்கள். அது அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம்.

கம்பீர் , சேவாக் ஆகியோரெல்லாம் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்ட காலத்தில் ஒரு கட்சி நிலைப்பாட்டை எடுத்தனர். இதில் பாஜகவின் எம்பி ஆகவே தற்போது கம்பீர் மாறிவிட்டார். சச்சின் காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா எம்பி ஆகவும் பதவி வகித்தார். ஆனால் தோனி இதுவரை தாம் எந்த கட்சி என்று வெளிப்படையாக சொன்னதில்லை.
இதே போல் விராட் கோலியும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளியே சொன்னது கிடையாது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு விராட் கோலி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாக ஒரு புகைப்படம் பரவியது. இதனால் ஷாக்கான பலரும் விராட் கோலியின் சமூக வலைத்தள பக்கத்தை சென்று பார்த்தார்கள்.
ஆனால் அப்படி எந்த ஒரு போஸ்ட்டும் இல்லை. இதையடுத்து விராட் கோலி உடனடியாக அதனை டெலிட் செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அது ஒரு போலி புகைப்படம் என பிறகு தெரியவந்தது. விராட் கோலி பெயரை பயன்படுத்தி வேறு யாரோ இது போல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று புகைப்படத்தை நீங்களும் பார்த்தீர்கள் என்றால் அது உண்மையிலேயே அந்த பிரபலம்தான் போட்டார்களா என்ற குழப்பம் ஏற்பட்டால் ஒன் இந்தியா தமிழ்இணையதளங்களில் இது உண்மையா பொய்யா என்பது குறித்து நாம் விளக்கம் அளித்து இருப்பதை தவறாமல் படியுங்கள்.