பிரிட்ஜ்டவுன்: சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் பிடித்த கேட்ச் இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், அம்பாய்ர் தவறான தீர்ப்பை அளித்து விட்டார் எனவும், அது அவுட் இல்லை, மாறாக சிக்ஸ் என அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் சில தென்னாப்பிரிக்க ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இதுவரை உலக கோப்பை இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வி அடைந்தது. இந்த தோல்வி அந்த அணியின் வீரர்களை நிலை குலைய வைத்தது. அந்த அணியின் ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் சில தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்ய குமார் யாதவ் கேட்ச் பிடித்த போது அவரது கால் பவுண்டரி கோட்டில் பட்டது என கூறி வருகின்றனர். அம்பயர் தவறான தீர்ப்பை வழங்கியதாகவும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அதன் பின் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்களை வீழ்த்தினர். இந்த நிலையில் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் மட்டுமே அதிரடியாக ஆடக்கூடிய ஒரே பேட்ஸ்மேனாக இருந்தார்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறலாம் என்று நிலை இருந்தது. ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை சந்தித்த டேவிட் மில்லர் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு பந்தை தூக்கி அடித்தார். அப்போது பவுண்டரி எல்லைக்கு அருகே ஓடி வந்த சூர்யகுமார் யாதவ் பந்தை கேட்ச் பிடித்தார். எனினும், ஓடி வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை அவர் தாண்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதனால் பந்தை மேலே தூக்கிப்போட்டு, பின்னர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விட்டு, மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா? சூரியகுமார் கேட்ச் பிடிக்கும் போது அவரது கால் பவுண்டரி எல்லையை தொட்டதா? என அம்பயர்கள் சரி பார்த்தனர். ரிப்ளேவில் அவரது கால் சில இன்ச்கள் பவுண்டரி எல்லைக்கு உள்ளே இருப்பது தெளிவாக இருந்தது. இதை அடுத்து அது அவுட் என அறிவிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க வீரர்களும் கூட அது அவுட் தான் என்பதை ஏற்றுக் கொண்டனர். அதன் பின் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் சில தென்னாப்பிரிக்க ரசிகர்கள் சூர்யகுமார் சிக்ஸ் பிடித்த வீடியோ பதிவை எடுத்து அவரது கால் பவுண்டரி எல்லையில் உரசுவதாக கூறி வருகின்றனர். ஆனால், கேமராவின் மற்றும் ஒரு கோணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர். அம்பயர்கள் ரீப்ளேவில் பார்த்தபோது தெளிவான கேமரா கோணம் காட்டப்பட்டது. அதில் பவுண்டரி எல்லைக்கும், சூர்யகுமாரின் ஷூக்கும் இடையே சில இன்ச்கள் இடைவெளி இருந்தது. எனவே, இந்த கேட்ச்சில் எந்த சந்தேகமும் இல்லை என்பதால் அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். எனினும், தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் சிலரால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இவ்வாறு சூர்யகுமார் பிடித்த கேட்ச்சை வைத்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.