சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக எந்த வித ஆதாரமும் இல்லாமல் சிலர் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இதன் பின்னணி என்ன?
2024 ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்ற நிலை இருந்தது. மேலும் இது தோனி சென்னை சேப்பாக்கத்தில் ஆடும் கடைசி போட்டியாக இருக்கலாம் என்பதால் இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மிக எளிதாக 200 ரன்களை எடுத்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கமின்றி 5 விக்கெட் மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்திருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதை சுட்டிக் காட்டியே இந்தப் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் நடந்ததாக சர்ச்சையை கிளப்பினர்.
இது பற்றி விமர்சகர்கள் கூறுகையில் இந்த போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருப்பதாக குறிப்பிட்டனர். ஆனால் சமூக வலை தளங்களில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டுமே இணைந்து இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக விளையாடுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த அணி சிஎஸ்கே அணிக்கு விட்டுக் கொடுப்பதாகவும் சிலர் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் 140 முதல் 180 ரன்கள் வரை எடுப்பதே சராசரி ஸ்கோராக இருந்தது. அதிலும் குறிப்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல போட்டிகளில் 140 முதல் 160 ரன்கள் வரை மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது.
இப்போது சென்னை சிஎஸ்கே ராஜஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியிலும் அதே போன்ற கடினமான பிட்ச் இருந்ததால் தான் போட்டியில் குறைவான ஸ்கோர் எடுக்கப்பட்டதாக முன்னாள் வீரர்களும் வர்ணனையில் குறிப்பிட்டனர். ஒருவேளை ராஜஸ்தான் அணி மேட்ச் ஃபிக்சிங் செய்யப்பட்டதாக கூறினால் இந்த போட்டியில் டாஸ் வென்ற அந்த அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்திருக்காது. அதற்கு காரணம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே பிட்ச் சாதகமாக இருக்கும் என போட்டிக்கு முன் கூறப்பட்டது. எனவே, இந்தப் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ராஜஸ்தான் அணி குறைவான ஸ்கோர் எடுத்ததை மட்டும் வைத்து சிலர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.