சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அடுத்த 2025 ஐபிஎல் தொடரில், அந்த அணியில் இருந்து விலக இருப்பதாகவும், தோனிக்கு பதிலாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இணையப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை?
2018 முதல் 2024 வரை சுமார் ஏழு ஆண்டுகள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். அவர் தாமாக முன்வந்து வெளிவரவில்லை எனவும், டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் அவரை வெளியேற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், அந்த அணியில் சில குழப்பங்கள் இருக்கலாம் என்ற நிலையில் தான் ரிஷப் பண்ட் குறித்த செய்திகளும் பரவி வருகின்றன.

அந்த அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஏழு ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங்கின் கீழ் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த தகவல்களை அடுத்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும், அந்த அணி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியால் வெளியேறுவார் என்ற தகவல் பரவி வருகிறது.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து, முன்னாள் கேப்டன் தோனியின் இடத்தை நிரப்புவார் என்ற தகவலும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியம்?
2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அப்போது அனைத்து ஐபிஎல் அணிகளும் மூன்று அல்லது நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். மற்ற வீரர்கள் அனைவரையும் அணியை விட்டு நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் பின் மற்ற வீரர்களை ஏலத்தில் தான் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் ரிஷப் பண்ட் இடையே சுமூக உறவு இல்லை என்றால், அந்த அணியில் இருந்து அவர் நீக்கப்படுவார்.
பின்னர், அவர் ஏலத்தில் பங்கு பெற வேண்டும். அவர் நேரடியாக எந்த ஐபிஎல் அணியிலும் இணையவும் முடியாது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வேண்டும் என்றால், ஏலத்தில் மற்ற அணிகளோடு போட்டி போட்டு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க வேண்டும். ஏலத்தில் அப்போதைய சூழ்நிலையில் எவ்வளவு பணம் கையிருப்பில் உள்ளது என்பதை எல்லாம் வைத்து தான் ஒரு அணி எந்த ஒரு வீரரையும் வாங்க முடியும்.
எனவே, சிஎஸ்கே தான் ரிஷப் பண்ட்டை வாங்கும் என உறுதியாக கூற முடியாது. ரிஷப் பண்ட் சிஎஸ்கே-வில் இணைகிறார் என கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த பதவியை விட்டு விட்டு சிஎஸ்கே அணிக்கு வருவாரா? என்ற கேள்வியும் எழுகிறது. சிஎஸ்கே அணியில் இனி குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது ருதுராஜ் கெய்க்வாட் தான் கேப்டனாக இருப்பார். அவரை நீண்ட கால அடிப்படையில் தான் கேப்டனாக நியமித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். எனவேம் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இணைந்தாலும் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது.