சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2024 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வி அடைந்த பின் கடும் கோபத்தில் இருந்ததாகவும், ஆர்சிபி வீரர்களுக்கு கைகுலுக்காமல் உடைமாற்றும் அறைக்கு சென்று, அங்கு இருந்த ஒரு திரையை அவர் குத்தி உடைத்ததாகவும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறி இருந்தார்.
அதனால் தான் தோனி அந்த போட்டி முடிந்தவுடன் கை குலுக்க வரவில்லை, அவர் கோபத்தில் இருந்தார் என ஹர்பஜன் சிங் சுட்டிக்காட்டி கூறி இருந்தார். ஆனால், "இதில் எதுவுமே உண்மை இல்லை, இது அனைத்தும் குப்பை" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் கூறி இருக்கிறார்.

ஹர்பஜன் சிங் இது பற்றி பேசும்போது, "அந்தப் போட்டி முடிந்தவுடன் ஆர்சிபி வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டு இருந்தார்கள். சிஎஸ்கே அணியின் வீரர்கள் வரிசையில் நின்று கைகுலுக்க காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், ஆர்சிபி வீரர்கள் வருவதற்கு தாமதம் ஆனது. அவர்கள் வருவதற்குள் தோனி அறைக்குள் சென்று அங்கிருந்த திரையை குத்தினார்." என்று கூறி இருந்தார்.
இதன் மூலம் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி மற்றும் ஆர்சிபி வீரர்கள் நடந்து கொண்ட விதத்தால் தோனி கோபம் அடைந்ததாக அவர் கூறி இருந்தார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் கீழ் டாமி சிம்செக் விளக்கம் அளித்துள்ளார்.
"இது முற்றிலும் குப்பையான பதிவு. தோனி எதையும் உடைக்கவில்லை. அவர் எந்த போட்டிக்கு பின்னரும், எப்போதும் கோபமடைந்து நான் பார்த்ததில்லை. இது பொய் செய்தி." என கூறி இருக்கிறார் டாமி சிம்செக். அவர் அளித்த பதில் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதை அடுத்து ஹர்பஜன் சிங் உண்மையிலேயே நடந்ததை கூறினாரா? அல்லது அவர் கூறியதை வேறு மாதிரியாக மாற்றி வெளியிட்டு விட்டார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.