பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஐபிஎல் நிர்வாகம் தடை செய்யப் போவதாகவும், இன்ஸ்டாகிராமில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைப் பின் தொடர்வதை ஐபிஎல் சமூக வலைதளப் பக்கம் நிறுத்தி இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, அந்த அணியினர் பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழாவை நடத்த ஏற்பாடு செய்தனர். அந்த விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஐபிஎல் நிர்வாகம் தடை செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை பெற்றன. தற்போது அதேபோல ரசிகர்களின் இறப்புக்குக் காரணமாக இருப்பதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தடை செய்யப்படப் போவதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், ஐபிஎல் அமைப்பின் சமூக வலைதளப் பக்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் சமூக வலைதளப் பக்கத்தைப் பின் தொடர்வதை நிறுத்தி இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. ஆனால், உண்மையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பக்கத்தை ஐபிஎல் எப்போதும் பின் தொடரவில்லை என சிலர் விளக்கம் அளித்துள்ளனர். எனவே, இதில் எந்த உண்மையும் இல்லை.
மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மீது குற்றம் இருப்பதாக சட்டப்படி இதுவரை நிரூபணம் ஆகவில்லை. இப்போதுதான் விசாரணை தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தடை செய்வதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உள்ளது.
ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேரடியாக சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும், அந்த அணியின் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் சில புகார்கள் நிரூபணம் ஆனது. அதன் பின்னர் ஐபிஎல் தொடருக்குக் களங்கம் ஏற்படுத்திய காரணத்துக்காகத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டன. அந்த அணிகள் நேரடியாகக் குற்றம் செய்ததாக அப்போது பிசிசிஐ தெரிவிக்கவில்லை.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அதே நிலையில் தான் உள்ளது. அந்த அணி நேரடியாகத் தவறு செய்ததாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், அந்த அணியைச் சார்ந்த நிர்வாகிகளும், அந்த அணிக்காகப் பணியாற்றிய ஒரு தனியார் நிறுவனமும்தான் இதில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கின்றன.
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அப்போது ஐபிஎல் நிர்வாகம் ஆர்சிபிக்குத் தடை விதிப்பது குறித்து நிச்சயம் ஆலோசிக்கும். அப்போது சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விதிக்கப்பட்ட தடையை முன்னுதாரணமாக வைத்து தடை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், இப்போதைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்குத் தடை விதிக்க எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. அந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.