அனந்தபூர்: துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி அனந்தபூரை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியை காண அதிக அளவில் ரசிகர்கள் கூடினார்கள். அதே சமயம், மற்றொரு போட்டி நடைபெற்று வரும் பெங்களூரு மைதானத்தில் நூறு பேர் கூட இல்லை.
அனந்தபூரில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட முக்கிய காரணமே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் என சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் தான் அந்த அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடி இருக்கிறார்கள் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதும் போட்டியில் பெங்களூரு மைதானத்திலும், இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டி ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூரில் உள்ள சிறிய மைதானத்திலும் நடைபெற்று வருகின்றன. பெங்களூருவில் போட்டியை நடத்த காரணமே அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பது தான்.
ஆனால், பிசிசிஐ எதிர்பார்ப்புக்கு மாறாக பெங்களூருவில் இந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்கள் வரவில்லை. ஆனால், அனந்தபூரில் ரசிகர்கள் கூடி இருந்தனர். இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் ஆடிவரும் பெங்களூரு மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் அந்தப் போட்டியை நேரில் காண ரசிகர்கள் பெரிய அளவில் வரவில்லை.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்ததில் நகரம் பகுதியில் பகல் நேரத்தில் நடக்கும் உள்ளூர் போட்டி என்பதால் ரசிகர்கள் அதிக அளவில் பெங்களூரு மைதானத்திற்கு வரவில்லை என கூறினர். அனந்தபூரை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் நீண்ட காலத்திற்குப் பிறகு நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் அதை பார்க்கக் கூடியதாக கூறப்படுகிறது.
அனந்தபூரில் இதுவரை ஐபிஎல் போட்டி கூட நடத்தப்பட்டதில்லை. மிகச் சில உள்ளூர் போட்டிகள் மட்டுமே அங்கு நடைபெறும். அதனால் ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்று இருக்கும் போட்டி என்பதால் இதை நேரில் காண அதிக அளவில் கூடி இருக்கின்றனர்.