பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் சோகத்தில் பால்கனியில் கண்ணீர் விட, அவரது நண்பரான கே.எல். ராகுல் அவருக்கு ஆறுதல் கூறுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது.
ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய அந்த வீடியோவின் உண்மையான பின்னணி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது குறித்த உண்மையை கருண் நாயரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

சுமார் 8 வருடங்கள் என்ற நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் திரும்பினார் கருண் நாயர். சேவாக்கிற்குப் பிறகு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையுடன் அணிக்குத் திரும்பியதால், அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்று வாய்ப்புகளில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 0, 20, 31, 26, 40, மற்றும் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அந்த டெஸ்ட் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கியமான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களில், வீரர்களின் பால்கனியில் கருண் நாயர் கண்ணீருடன் அமர்ந்திருக்க, அவரது நண்பரும், கர்நாடக அணி வீரருமான கே.எல். ராகுல் தோளில் கைபோட்டு ஆறுதல் கூறுவது போன்ற வீடியோ வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ உண்மையானது என பலரும் நம்பி, கே.எல். ராகுலின் நட்பைப் பாராட்டியும், கருண் நாயருக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வந்தனர். ஆனால், சில ரசிகர்கள் அந்த வீடியோவில் இருந்த ஒரு முக்கிய விஷயத்தைக் கவனித்தனர். அந்த வீடியோவில் இருப்பது மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் பால்கனி அல்ல, அது லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனி என்பதை கண்டுபிடித்தனர். இதனால், இந்த வீடியோ மான்செஸ்டர் டெஸ்டின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.
இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கருண் நாயரே இதுகுறித்து பிரத்யேக பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். அது ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று நினைக்கிறேன். அது உண்மையான வீடியோவே அல்ல. ஆம், நாங்கள் பால்கனியில் ஒன்றாக அமர்ந்திருந்தது உண்மைதான். ஆனால், அந்த வீடியோவில் காட்டப்பட்டது எதுவும் உண்மையில்லை," என்று கூறி அதிர்ச்சியளித்தார்.
அணியில் இருந்து நீக்கப்பட்டது மற்றும் குறைந்த ஸ்கோர்கள் எடுத்தது போன்ற கடினமான காலங்களில், கர்நாடகாவைச் சேர்ந்த சக வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாக கருண் நாயர் குறிப்பிட்டார்.
"பிரசித் கிருஷ்ணாவும், கே.எல். ராகுலும் என்னுடன் இருந்தது நன்றாக இருந்தது. கடந்த 2 மாதங்களில் நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டோம். கிரிக்கெட் குறித்தும், மீண்டும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்தது குறித்தும் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
எனவே, சமூக வலைதளங்களில் வைரலானது போல் கே.எல். ராகுல், கண்ணீர் விட்ட கருண் நாயருக்கு ஆறுதல் சொன்ன நிகழ்வு உண்மையில் நடக்கவில்லை என்பதும், அந்த வீடியோ போலியானது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.