துபாய்: நடுவரின் முடிவுக்கு எதிராக நடந்துகொண்ட, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் பாப் டுப்ளசிஸுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதத்தை பிடித்தம் செய்ய ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே, சென்னையில், கடந்த வியாழக்கிழமை நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போட்டியின்போது, அக்சர் பட்டேல் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் டோணியிடம் டுப்ளசிஸ் கேட்ச் கொடுத்தார்.

அக்சர் மற்றும் டோணி ஆகியோர் நடுவரிடம் அப்பீல் செய்ததை தொடர்ந்து அது அவுட் என நடுவர் அறிவித்தார். இதை பார்த்த டுப்ளசிஸ் ஒரு சில வினாடிகள் களத்தில் நின்றபடி கைகளை அசைத்து காட்டி அவுட் இல்லை என்பது போல பாவனை செய்தார்.
இதனிடையே, பாப் டுப்ளசிஸ் நடவடிக்கையை ஆய்வு செய்த ஐசிசி எலைட் பேனல், அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 விழுக்காட்டு தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு அதிகபட்சம் 50 விழுக்காடு அளவுக்கு போட்டி ஊதியத்தை பிடித்தம் செய்ய முடியும் என்றபோதிலும், இவருக்கு 15 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
டிவியில் ரிப்ளே செய்து பார்த்தபோது, டுப்ளசிஸ் பேட்டில் பந்து பட்டுதான் டோணியிடம் கேட்ச் ஆகியிருந்தது தெளிவாக தெரிந்தது. இப்போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.