சென்னை: டெக்ஸால் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சென்னை அணியின் முன்னாள் வீரரும், தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டனுமான டூ பிளஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கிரிக்கெட் ரசிகர்களையும், கிரிக்கெட்டையும் பிரபலமாக்கும் வகையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரை போலவே, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை மாதம் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 6 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அதில் 4 அணிகளை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளார்.
அந்த அணிகளுக்கு டெக்ஸால் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ், சியாட்டல் ஆர்காஸ் (டெல்லி உரிமையாளர்), மும்பை நியூ யார்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெக்ஸாஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்களின் பெயர்கள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர், சென்னை அணி பயிற்சியாளர் டுவைன் பிராவோ, அம்பாதி ராயுடு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர், ஜெரால்ட் கொயட்சே, ஆஸி. அணியின் டேனிடல் சாம்ஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்னை அணியின் முன்னாள் வீரரும், ஜொஹன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டூ பிளஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுமொத்த சென்னை அணி வீரர்களும் அமெரிக்கா டி20 கிரிக்கெட் லீக்கில் களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவிலும் ஸ்டீபன் பிளெம்மிங், ஆல்பி மார்கல் ஆகியோர் உள்ளனர். இதனால் தல தோனி மற்றும் சின்னதல ரெய்னா ஆகியோரை தவிர்த்து அனைவரும் களமிறங்கவுள்ளனர். இதில் ரெய்னாவும் இணைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.