கராச்சி: இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபக்கர் ஜமானை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும் எகிறி வருகிறது. நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களும், இஃப்திகர் அஹ்மத் 109 ரன்களும் விளாசினர். பவுலிங்கிலும் பாகிஸ்தான் வீரர்கள் அசத்தினர்.

ஆனால் தொடக்க வீரர்களான இமாம் உல் ஹக் 9 ரன்களிலும், ஃபக்கர் ஜமான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இமாம் உல் ஹக் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார். ஆனால் ஃபக்கர் ஜமான் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் சேர்த்து 59 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் மட்டுமே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஃபக்கர் ஜமானை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ரமீஸ் ராஜா பேசுகையில், பாகிஸ்தான் அணியின் ஒரேயொரு பிரச்சனை தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் தான். அதிரடியான ஷாட்களை ஆடக் கூடிய வீரர் அவர். அவரை போன்ற வீரர்கள் ஃபார்ம் அவுட்டானதால், அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு சில நாட்கள் தேவைப்படும். அவர்களுக்கான நேரத்தை நாம் அளிக்க வேண்டும்.

குறிப்பாக லெக் திசையில் சிறந்த ஷாட்களை ஆடக் கூடியவர் என்றாலும், அவர் மீண்டும் தனது டெக்னிக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கூட சிறப்பாக விளையாடவில்லை. இமாம் உல் ஹக் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்து வருகிறார். இதுதான் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
அதனால் பாகிஸ்தான் அணி ஃபக்கர் ஜமானை நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு பதிலாக ஃபார்மில் இருக்கும் தொடக்க வீரர் யாரையாவது இந்திய அணிக்கு எதிராக களமிறக்க வேண்டும். மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அதுவும் வீணாகும் என்று தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய வீரர் ஜமான் என்பது குறிப்பிடத்தக்கது.