அடேயப்பா... ! பட்டோடி முதல் கம்பீர் வரை... கிரிக்கெட்டுக்கு பிறகு.. அரசியலில் குதித்தவர்கள்
Recommended Video

டெல்லி:இதோ... அதோ என்று அனைவரும் முணுமுணுத்து வந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஒரு வழியாக தேசிய கட்சியான பாஜகவில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டார். அவரை போல.. கடந்த காலங்களில் விளையாட்டு துறைகளில் பல்வேறு நபர்களும் அரசியல் கட்சியில் இணைந்திருக்கின்றனர்.
எந்த துறைகளில் இருந்து அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும்.. கிரிக்கெட் வீரர்கள் கட்சிகளில் சேரும் போது அதை பற்றிய ஆர்வம் அந்த விளையாட்டை விட அதிகமாக இருக்கிறது. கடந்த காலங்களில் கிட்டத்தட்ட கவுதம் கம்பீர் போன்றே பல புகழ்பெற்ற கிரிக்கெட் பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் கைகோர்த்திருக்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல.. சர்வதேச அளவிலும் பல நாடுகளில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் இறங்கி ஆட்சியை பிடித்ததும் உண்டு. அதற்கு மிக சமீபத்திய உதாரணம்.. இம்ரான் கான்.

இம்ரான் கான்
தெஹ்ரீக் இன்சாப் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது பாகிஸ்தானின் பிரதமகராகவும் ஆகிவிட்டார். விமானி அபிநந்தன் விஷயத்தில் அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுவிட்டார்.

இலங்கை விளையாட்டு வீரர்கள்
அதேபோன்று இலங்கையின் அர்ஜூன ரணுதுங்கா, சனத் ஜெயசூர்யா, திலக ரத்னே ஆகியோரும் அந்நாட்டு அரசியலில் குதித்தவர்கள். இந்திய அளவிலும் பிரபல கிரிக்கெட் சாதனையாளர்கள் அரசியலில் குதித்துள்ளனர்.

அரசியலில் பட்டோடி
கடந்த பல ஆண்டுகளை கடந்தும் இது தொடர்ந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மன்சூர் அலிகான் பட்டோடி, 1971ம் ஆண்டு ராவ் பிரேந்திர் சிங்கின் விஷால் அரியானா கட்சியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். அதன் பிறகு.. காங்கிரசில் இணைந்து 1991ம் ஆண்டு போபால் தொகுதியில் களமிறங்கி தோல்வியை சந்தித்தார்.

மனோஜ் பிரபாகர்
அவருக்கு அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்.. மனோஜ் பிரபாகர். காங்கிரசில் சேர்ந்து 2004ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அரசியலில் சித்து
அவருக்கு அடுத்தபடியாக.. சிக்சர் சித்து என்று செல்லமாக அழைக்கப்படும் நவ்ஜோத் சிங் சித்து. 2004ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அமிர்தசரஸ் தொகுதியில் வென்றார். பின்னர் 2017ம் ஆண்டு காங்கிரசுக்கு சென்றார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் வென்றார்.

வினோத் காம்பிளி
வினோத் காம்பிளி. 2009ம் ஆண்டு தமது பிறந்த நாளில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெயர் பெற்றவர். 2009ம் ஆண்டு தேர்தலில் லோக் பார்தி கட்சியில் நின்று தோல்வியை தழுவினார்.

காங். டிஆர்எஸ்
முகமது அசாரூதின்... அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விடாத வீரர். 2009ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். மொராதாபாத் எம்பியாக வெற்றி பெற்றார். பின்னர் கருத்து வேறுபாட்டால் டிஆர்எஸ் கட்சியில் தம்மை இணைத்து கொண்டார்.

கீர்த்தி ஆசாத்
மிக சமீபமாக.... கீர்த்தி ஆசாத். பாஜகவில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்ட அவர்... அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பின்னர் நேராக ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தார்
அவர்களின் பட்டியலில் தற்போதைய வரவு... கவுதம் கம்பீர். உலக கோப்பை தொடங்க இருக்கும் இந்த காலக்கட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக மட்டைக்கு பதிலாக பல்வேறு சர்ச்சையான கருத்துகளை கூறி கம்பு சுழற்றிக் கொண்டிருந்தார். தற்போது.. அருண் ஜெட்லி முன்னிலையில் தம்மை பாஜகவில் இணைத்து கொண்டிருக்கிறார்.

சர்வ சாதாரணம்
தேர்தல் என்பது அரசியலில் மட்டுமே அல்ல... அனைத்து துறைகளிலும் சர்வ சாதாரணமாக இருப்பது. அதுபோல... தான் அரசியல் என்பது இல்லாத இடமே கிடையாது. அது விளையாட்டு உலகமாக இருந்தாலும் சரி.


Click it and Unblock the Notifications