சென்னை : இந்திய அணியின் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஆசிய கோப்பை தொடருக்கு முன் தயாராகி இந்திய அணிக்கு திரும்பியதோடு, உலகக்கோப்பை அரையிறுதியில் சதம் விளாசி அசத்தியவர் ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்த பக்கம் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் இந்திய அணியுடன் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் பயணித்து வந்தவர் இஷான் கிஷன். கிடைத்த வாய்ப்புகளில் தன்னை நிரூபித்தாலும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிரந்தர இடத்தை இஷான் கிஷனால் பிடிக்க முடியவில்லை. இதனால் கேப்டனுடன் மோதலில் ஈடுபட்டதோடு, ரஞ்சி டிராபி போட்டிகளிலும் விளையாட மறுத்தார் இஷான் கிஷன்.
இதன் காரணமாகவே இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சூழ்நிலையை இந்திய அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் அனுபவித்துள்ளார். சீனியர் வீரராக இருந்து பல்வேறு முறை இந்திய அணியை வெற்றிபெற வைத்த போதும், அஸ்வினை வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி தொடர்ந்து புறக்கணித்த வரலாறு இருக்கிறது.
இவ்வளவு ஏன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்த அஸ்வினை, கடைசி நேரத்தில் இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. இதனால் விரக்தியடைந்த அஸ்வின், இத்தனை நாட்கள் நண்பர்களாக தெரிந்த அனைவரும், இப்போது உடன் விளையாடும் மனிதர்களாக மாறிவிட்டதை போல் உணர்வதாக பேட்டியளித்தார்.
அஸ்வினின் ஈகோவை இந்திய அணி நிர்வாகம் தொட்டு பார்த்ததாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அஸ்வின் அந்த ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு உடனடியாக அடுத்தடுத்த டெஸ்ட், உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்கு தயாராகினார். அதிலும் இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்ட பின், அஸ்வினின் செயல்பாடுகள் அதிரடியாக இருந்தது.
இதனால் டிஎன்பிஎல் தொடரில் கூட நேரம் கிடைக்கும் போது விளையாடும் அஸ்வினை போல் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இருக்க வேண்டும் என்பதே பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் அஸ்வினை பின்பற்றி மீண்டும் இரு நட்சத்திர வீரர்கள் உச்சத்திற்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.