ஜாம் நகர் : அம்பானி குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான்ஸ் ஆடிய தோனி மீது வடமாநில ரசிகர்கள் பலரும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் நிறுவனத்தை சேர்ந்த ராதிகா மெர்ச்சண்ட்-க்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் சோஃபாவை மொத்தமாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்த ஆனந்த் அம்பானி, அடுத்த 6 மாதங்களில் உடல் எடையை குறைத்து ஆச்சரியம் கொடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் போட்டிக்கு நிச்சயம் ஆஜாராகுவார் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவருடனும் நல்ல நட்பில் இருப்பார். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடினாலும் தோனியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர் ஆனந்த் அம்பானி. அதேபோல் முகேஷ் அம்பானியும் தோனியின் தீவிர ரசிகராவார். ஒருமுறை தோனியை வரவேற்பதற்காக மும்பை மைதான வாசலுக்கே வந்து கைகளை குலுக்கி அழைத்து சென்றார்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான முக்கிய விருந்தினர்களில் ஒருவராக தோனி அழைக்கப்பட்டார். இதையடுத்து ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் இணைந்து கலந்து கொண்டார். 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில் தோனி பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைவி சாக்ஷி மற்றும் பிராவோ ஆகியோருடன் இணைந்து தாண்டியா ஆட்டம் ஆடினார்.
இந்த வீடியோ தோனி மட்டுமல்லாமல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியது. இந்த நிலையில் தோனி மீது சில ரசிகர்கள் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜனவரி மாதம் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தோனி அழைக்கப்பட்டும், அவர் வரவில்லை. அதேபோல் ராமர் கோயிலுக்கு இதுவரை நேரடியாகவும் செல்லவில்லை. இதனால் வடமாநில ரசிகர்கள் சிலர், ராமர் கோயிலுக்கு வருவதற்கு மட்டும் தோனிக்கு நேரம் கிடைக்கவில்லையா என்று காட்டமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.