மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு எடுத்த இந்த முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு அணியில் பேட்ஸ்மேன் காயமடைந்தால் மற்றொரு பேட்ஸ்மனையும், பவுலர் காயம் அடைந்தால் மற்றொரு பவுலரையும், ஒரு ஆல்ரவுண்டர் காயம் அடைந்தால் மற்றொரு ஆல் ரவுண்டரை தான் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர் அணியில் இல்லை என்றால் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர்கள் வெங்கடேஷ் ஐயர், தீபக்சாகர் மற்றும் விஜய் சங்கரை தான் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் தன்னுடைய ஆல்ரவுண்டர் தகுதிக்காகவே அணியில் இடம் பெற்றார் என்றும் ஆனால் தற்போது அவரை தேர்வுக்குழு கண்டு கொள்ளவே இல்லை என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று திறமையும் விஜய் சங்கருக்கு இருப்பதால் அவரை 3d பிளேயர் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் பாராட்டியதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் தற்போது இந்த 3d வீரரை ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதேபோன்று சர்துல் தாக்கூர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ள நிலையில் நட்சத்திர வீரர் தீபக்சாகரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்றும் அவர்கள் யோசனை கூறியுள்ளனர். பந்தை நன்றாக ஸ்விங் செய்வதோடு பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ரன்களை சேர்க்கும் வீரர் என்பதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் தோனியின் செல்லப் பிள்ளையான தீபக்சாகர் அணிக்கு வந்திருந்தால் அது இந்தியாவின் பலத்தை மேலும் அதிகரித்திருக்கும் என்றும் கருத்து கூறியுள்ளனர்.