சென்னை: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்ததால் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. அதேபோல் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தாலும், கேப்டன் ஷிகர் தவானின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ்களை பார்க்கலாம்.

கடந்த ஆண்டு முதலே குஜராத் அணி பல்வேறு அணிகளுக்கு எதிரான போட்டியிலும் கடைசி நிமிடத்தில் சிக்சர்கள் விளாசி எதிரணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வெற்றிகளை பெற்று வந்தது. இதனால் சென்னை, பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா என்று ஏராளமான அணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நேற்றையப் போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் விளாசி ரிங்கு சிங் குஜராத் அணிக்கே அதிர்ச்சி கொடுத்தார். இதனை வைத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒருவர் பேசும், ரொம்ப நாள் ஆச மேடம்.. உங்க முன்னாடி இப்படி இருக்கனும்னு" என்ற வசனத்தை மாற்றி, "ரொம்ப நாள் ஆசை மேடம். கடைசி நிமிடத்துல யாராவது குஜராத் அணிய போட்டு பொளக்கனும்னு" என்று உருவாக்கப்பட்ட மீம் குபீர்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்களை எடுத்ததோடு, பஞ்சாப் அணியும் 143 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தார். இதனை திருப்பாச்சி படத்தில் வரும் சனியன் சகடை பேசும், "ஒரிஜினல் எமன் எப்படி இருப்பான் தெரியுமா" என்று வசனம் பேசி இருப்பார். அதனை தவானுக்கு பொருத்தி, "ஒரிஜினல் ஓப்பனர் எப்படி இருப்பானு தெரியுமா டா" என்று உருவாக்கப்பட்ட மீம் அதகளம்.

குஜராத் கேப்டன் ரஷீத் கான் 17வது ஓவரில் ரஸ்ஸல், ஷர்துல் தாகூர் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இருப்பார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு பதிலடியாக 20வது ஓவரில் ரிங்கு சிங் 5 சிக்சர்களை விளாசி இருப்பார். இதனை இங்கிலிஷ்காரன் படத்தில் வரும் வடிவேலுவாக ரஷீத், சத்யராஜிடம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஒரு அரிவாளை காட்டுவது போலவும், பதிலுக்கு சத்யராஜ் போல் ரிங்கு சிங் இரு அரிவாளை காட்டுவது போலவும் உருவாக்கப்பட்ட மீம் அட்ராசக்க ரகம்.

நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா உடல்நிலை பிரச்சனையால் களமிறங்காததால் ரஷீத் கான் கேப்டனாக செயல்பட்டார். தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்றிருந்த குஜராத் அணி, ரஷீத் கான் தலைமையில் களமிறங்கி தோல்வியை சந்தித்தது. வெற்றிவேல் சக்திவேல் படத்தில் வக்கப்போரை விற்கப் போகும் சத்யராஜ் வியாபாரத்தை வடிவேலு கெடுத்துவிடுவார். அப்போது, "காலைல சோத்த போட்டு கூட்டிட்டு வந்ததுக்கு, உன்னால என்ன பன்ன முடியுமோ.. அத பண்ணிட்ட" என்று வசனம் பேசி இருப்பார். இதனை சத்யராஜாக ஹர்திக் பாண்டியாவையும், வடிவேலுவாக ரஷீத் கானையும் வைத்து, "உன்னைய நம்பி ஒரு மேட்ச் கேப்டன் பண்ண சொன்னா.. உன்னால என்ன பண்ண முடியுமோ, அத பண்ணிட்ட" என்று உருவாக்கிய மீம் சரவெடி.

பஞ்சாப் அணியின் அத்தனை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சூழலில், ஷிகர் தவான் தனி வீரராக 69 பந்துகளில் 99 ரன்கள் விளாசி இருப்பார். இதனை வானத்தைப் போல படத்தில் வரும் அண்ணன் விஜயகாந்த் மழையில் தம்பிகள் நனையாமல் தூங்குவதற்காக தட்டியை பிடித்துக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் இருப்பார். அதனை தூங்காமல் இருக்கும் ஷிகர் தவானாக விஜயகாந்தையும், அவர் மடியில் நிம்மதியாக தூங்கும் தம்பிகளாக பஞ்சாப் பேட்ஸ்மேன்களையும் வைத்து உருவாக்கப்பட்ட மீம் கொண்டாட்டம்.