கொழும்பு: கொழும்புவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரிசர்வ் டேவிலும் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ விரும்பாததால், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது ஆசியக் கோப்பையை நடத்த உரிமை பெற்றிருந்த பாகிஸ்தான் அணி, பாகிஸ்தானில் சில போட்டிகளையும், ஐக்கிய அரபி அமீரகத்தில் சில போட்டிகளையும் நடத்த பரிந்துரை செய்துள்ளது.

இதனை ஏற்காத ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, துபாயில் அதிக வெப்பமாக இருக்கும் என்று கூறியதாக பிசிபி முன்னாள் தலைவர் நஜாம் சேதி தெரிவித்திருந்தார். ஆனால் இதே பிசிசிஐ தான், ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையை துபாயில் நடத்தும் பரிந்துரையை ஏற்காத ஜெய் ஷா, இலங்கையில் நடத்த திட்டமிட்டார்.
அதிலும் டம்புல்லாவில் போட்டிகளை நடத்த ஒளிபரப்பு நிறுவனம் விரும்பவில்லை என்றும் ஹம்பந்தோட்டா மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் விளையாட விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனால் இலங்கையின் பாலக்கலே மற்றும் கொழும்புவில் மட்டுமே ஆசியக் கோப்பையை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் என்று நிர்வாகிகளால் கூறப்பட்டது.
ஆனால் அதுகுறித்து எந்த கவலையும் கொள்ளாத ஜெய் ஷா, கொழும்புவில் போட்டியை நடத்துவதில் தீவிரமாக இருந்தார். குரூப் போட்டிகள் முடிந்து சூப்பர் 4 போட்டிகள் தொடங்க சில நாட்கள் நேரமிருந்தும் எந்தவித மாற்றங்களையும் செய்யவில்லை. அதற்கு மாற்றாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டேவை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஜெய் ஷா.
இதனால் இலங்கை, வங்கதேச கிரிக்கெட் வாரியங்களும் அதிர்ச்சியடைந்தன. இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஒருநாள் தொடரை நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கலாமே என்று ஆக்ரோஷம் காட்டினர். இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்த முடியாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு மாற்றப்பட்டும் திட்டமிட்டபடி போட்டியை தொடங்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும், துபாயில் வெப்பம் இருப்பதாக கூறிய ஜெய் ஷாவை, இலங்கையில் குளுகுளு என்று இருக்கிறதா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.