
2வது டெஸ்ட்
இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. க்ராலேவுக்கு பதில் ஹமீத், ஸ்டூவர்ட் பிராடுக்கு பதில் மார்க் வுட் மற்றும் லாரன்ஸுக்கு பதில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லே, ஹசீப் ஹமீட், ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (w), மொயீன் அலி, சாம் கர்ரன், ஓலே ராபின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக பிராட் போட்டியில் இருந்து விளக்கியுள்ளார். ஆண்டர்சனும் காயம் காரணமாக அணியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் இன்று விளையாடி வருகிறார்.

மாலை 4 மணிக்கு
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒரேயொரு மாற்றம் தான். காயம் அடைந்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துலுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்து குரல்கள் எழுந்த நிலையில், இஷாந்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று போட்டி தொடங்கும் போது மழைச் சாரல் வீசியதால் தான், டாஸ் 20 நிமிடங்கள் தாமதமானது. போட்டியும் அரை மணி நேரம் தாமதமானது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மாலை 4 மணிக்கு தொடங்கியது.

நெகிழ்ச்சி சந்திப்பு
இந்நிலையில், இப்போட்டியில் முன்னாள் இந்திய கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். கங்குலியின் மனைவி டோனாவும் கணவருக்கு துணையாக அங்கு இருக்கிறார். போட்டியின் போது, கங்குலியும் முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜெஃப்ரே பாய்காட்டும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தது சமூக தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் என்னய்யா சுவாரஸ்யம் என்கிறீர்களா?

டிரேட் மார்க்
கங்குலிக்கு "தாதா" என்ற செல்லப் பெயர் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல, "பிரின்ஸ் ஆஃப் கொல்கத்தா" என்றும் அவருக்கு பெயர் உள்ளது. அதாவது கொல்கத்தாவின் இளவரசன் என்று அவரை ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இந்த பெயரை கங்குலிக்கு வைத்ததே இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரே பாய்காட் தான். கங்குலியின் ஆஃப் சைட் ஷாட்ஸ்களை பார்த்து பிரமித்துப் போன பாய்காட், கங்குலிக்கு இந்த பெயரை அளித்தார். அவர் எதேச்சையாக இந்த பெயரை உச்சரிக்க, அதன்பிறகு அதுவே கங்குலியின் டிரேட் மார்க் ஆனது.

கண்மூடித்தனமான அன்பு
இந்த நிலையில், பல வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்கு வாய்ப்பு இந்த இங்கிலாந்து தொடரில் ஏற்பட்டிருக்கிறது. தான் பார்த்து வியந்து, ரசித்த கங்குலியிடம் மீண்டும் அவர் பேசிக் கொண்டிருந்தது ரசிகர்களை குதூகுலம் அடையச் செய்தது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக தளங்களில் கொண்டாடி வருகின்றனர். என்னதான் சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொன்னாலும், கங்குலி, தோனி போன்ற மிகச் சில வீரர்கள் மீது ரசிகர்கள் எப்போதுமே யாருக்குமே கொடுக்காத அன்பை பொழிவார்கள். உலகின் ஆகச் சிறந்த வீரர்களுக்கு கூட அப்படிப்ப கண்மூடித்தனமான அன்பு கிடைக்காது.


Click it and Unblock the Notifications











