சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். காலை 9 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியதும் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிச் சென்றனர்.
இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கான இடையேயான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, வரும் 22ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ;மூன்றாண்டுகள் கழித்து சென்னையில் இந்த இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவதால், இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்காக அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். சிலர் நள்ளிரவில் இருந்தே சேப்பாக்கம் டிக்கெட் கவுண்டர் பகுதியில் முகாமிட்டிருந்தனர்.
குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.750 ஆகும். சி.டி. மற்றும் இ ஸ்டாண்டின் கீழ் பகுதி வரிசையில் இருக்கும் இந்த டிக்கெட்டுகள் பூத் நம்பர் 6-லில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதேபோல ரூ.1,500 (சி,டி, மற்றும் இ ஸ்டாண்டு மேல்பகுதி), ரூ. 3 ஆயிரம் (சி,டி, மற்றும் இ ஹாஸ்பிட்டாலிட்டி ஏ.சி.பாக்ஸ் மற்றும் எச் கீழ்பகுதி ஏசி), ரூ.5 ஆயிரம் (எப்.எச், ஏசி பாக்ஸ் மற்றும் பெவிலியன் டெரஸ்), ரூ.6 ஆயிரம் (பெவிலியன் ஏசி பாக்ஸ்), ரூ.7,500 (ஜி ஸ்டாண்டு ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ்), விலையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தில் மொத்த இருக்கை 36 ஆயிரமாகும். ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 ஸ்டாண்டுகளை பயன்படுத்த இயலாது. இந்த 3 ஸ்டாண்டுகளின் இருக்கை 12 ஆயிரமாகும். இதனால் 24 ஆயிரமாக இருக்கை குறைந்து உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கிளப்புகள், ஆயுள்கால உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள், முன்னாள் வீரர்கள், முன்னாள், இன்னாள் நடுவர்கள் மற்றும் அரசின் பல்வேறு நிறுவனங்ளுக்கு டிக்கெட் வழங்க வேண்டி உள்ளது. இதனால் 10 ஆயிரம் டிக்கெட்டுகளே விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விடிய விடிய காத்திருந்து டிக்கெட்டுகளை கிரிக்கெட் ரசிகர்கள் வாங்கிச் சென்றனர்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இவ்விரு அணிகளுக்கான இடையே சேப்பாக்கம் மைதானத்தில், கடந்த 2012ஆம் ஆண்டில் கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 3 வருடங்கள் கழித்து மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. ரசிகர்களின் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டது.