என்ன காயம்
ஆசிய கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜடேஜாவு, திடீரென காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டி20 உலகக்கோப்பையில் இருந்தும் விலகினார். வங்கதேச தொடருக்கு வந்துவிடுவார் எனக்கூறப்பட்ட சூழலில், முழு உடற்தகுதி பெறவில்லை எனக்கூறி வீட்டிலேயே இருந்துவிட்டார்.
ஜடேஜாவின் கம்பேக்
இந்த சூழலில் தான் ஜடேஜா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். இவர் அடுத்ததாக வரும் ஜனவரி மாதம் வரவுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவார் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் காரணங்களுக்காக தான் ஜடேஜா தேசத்திற்காக விளையாடாமல் இருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
என்ன பிரச்சினை
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். காயத்தில் இருந்த ஜடேஜா, மனைவிக்கு வாக்கு சேகரிக்க மட்டும் பல நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்த பின்னர் சரியாக இந்திய முகாமிற்குள் வந்துள்ளார்.
ரசிகர்கள் கோபம்
தேர்தலுக்காக செலவிட்ட நேரத்தில் என்.சி.ஏவுக்கு வந்திருந்தால், இந்நேரம் வங்கதேச தொடரில் ஆடியிருக்கலாம். ஆனால் தனது சுயநலத்திற்காக இந்திய அணியையே விட்டுக்கொடுத்துவிட்டார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு வங்கதேச தொடர் மிக முக்கியம் எனத்தெரிந்தும் இப்படி செய்துள்ளார் என ரசிகர்கள் கோபத்தில் விமர்சித்து வருகின்றனர்.