
முதல் பயிற்சி போட்டி
ஆஸ்திரேலிய களத்தை புரிந்துக்கொள்வதற்காக உள்நாட்டு அணியுடன் பயிற்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு இந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. பவுலிங்கில் அஸ்வினுக்கும் ஓய்வு தந்திருந்தனர்.

இந்திய அணி இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் சரியில்லை. கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த தீபக் ஹூடாவும் 22 ரன்களுக்கு நடையை கட்டினார். சிக்கலில் இருந்த இந்திய அணியை இந்த முறையும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தான் காப்பாற்றினர்.

அதிரடி அரைசதம்
சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 52 ரன்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக இருந்த ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை குவித்தது.

மோசமான பவுலிங்
158 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 12 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இந்திய பவுலிங் முன்னேறிவிட்டது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போல மிடில் ஓவர்களில் இருந்து கடைசி வரை ரன்களை வாரி வழங்கினர். இதனால் 145 ரன்கள் வரை எதிரணி அடித்துவிட்டது. உள்நாட்டு அணியுடன் கூட இந்திய பவுலிங் எடுபடவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











