
துபாய் சென்ற சிஎஸ்கே
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் வந்தது. அங்கே ஒரு வாரம் சிஎஸ்கே வீரர்கள் குவாரன்டைனில் இருந்தனர். அப்போது மூன்று முறை அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு
அந்த பரிசோதனைகளில் ஒரு வீரர் மற்றும் சிஎஸ்கேவை சேர்ந்த 12 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் இரண்டாவதாக ஒரு வீரருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அடுத்து சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி எழுந்தது.

விளக்கம் அளிக்கவில்லை
சிஎஸ்கே அணியோ, பிசிசிஐயோ யாருமே இது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. சிஎஸ்கே அணியில் யார், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியானது.

சுரேஷ் ரெய்னா விலகல்
அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி விட்டதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்தார். ஏன் ரெய்னா விலகினார்? என்பது மர்மமாகவே உள்ளது.

பங்கேற்க மாட்டார்
சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் இந்தியா திரும்பி விட்டதாகவும், மீதமுள்ள ஐபிஎல் சீசனில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் சிஎஸ்கே அணி அறிவித்து இருந்தது. இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள் மனம் உடைந்தனர்.

பெரும் அதிர்ச்சி
ஏற்கனவே, சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நிலையில், அணியின் முக்கிய வீரரும், துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னா விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர்கள் தங்கள் உணர்வுகளை சமூக வலைதளங்களில் கொட்டி வருகிறார்கள்.

இது தான் அதிர்ச்சி
ஆகஸ்ட் 15 அன்று தோனியுடன், ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். 33 வயதே ஆகும் நிலையில் ரெய்னா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அந்த அறிவிப்பை விட ரெய்னா 2020 ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்பது தான் அதிர்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

அதிக போட்டிகளில் ஆடியவர்
அதிக ஐபிஎல் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் ரெய்னா தான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 2 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடவில்லை. ஆனால், இப்போது முழு ஐபிஎல் தொடரிலும் இடம் பெறப் போவதில்லை.

கண்ணீர் விடும் ரசிகர்கள்
இதையும் குறிப்பிட்டு உள்ளனர் சில ரசிகர்கள். பலர் இதயம் உடைந்து இருப்பதாவும், கண்ணீர் விடுவதாகவும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு மிக மிக மோசமானது என சிலர் தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications