அகமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் என்ற இலக்கைத் துரத்த முடியாமல் 111 ரன்களுக்குச் சுருண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, சேஸிங் மாஸ்டர் விராட் கோலியின் அருமையை சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இந்தத் தோல்விக்குத் துணை கேப்டன் அக்சர் படேலை அணியிலிருந்து நீக்கியது ஒரு மிகப்பெரிய தவறு என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், 11 வீரர்களைக் கொண்ட ஒரு பலமான பேட்டிங் வரிசை இருந்தும் இந்திய அணி ஏன் இவ்வளவு மோசமாகத் தோற்றது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 150 ரன்களுக்கு மேலான இலக்கை இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்தியது மூன்று முறை மட்டுமே. 2014 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 173 ரன்கள், 2016 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 161 ரன்கள் மற்றும் 2022 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 160 ரன்கள்.
இந்த மூன்று சிறப்பான வெற்றிகளுக்கும் ஒரே ஒரு பொதுவான காரணம் விராட் கோலி தான். அவர் முறையே 72, 82 மற்றும் 82 ரன்களைக் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சூர்யகுமார் யாதவ் தலைமையிலான தற்போதைய அணியால் 188 ரன்களை எட்ட முடியாமல் போனதற்கு, வீரர்களிடம் பொறுமையும் ஆடுகளம் குறித்த விழிப்புணர்வும் இல்லாததே முக்கியக் காரணமாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆனால், டேவிட் மில்லர் மற்றும் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு மிகவும் பொறுப்புடன் ஆடினர். பந்துவீச்சாளர்களை மதித்து விளையாடிய அவர்கள், தேவையில்லாத ஷாட்களைத் தவிர்த்து நேராக அடித்து ரன் சேர்த்தனர். இந்த விழிப்புணர்வு இந்திய பேட்டர்களிடம் இல்லாமல் போனது.
இந்திய அணியின் சேஸிங் முதல் ஓவரிலேயே சறுக்கத் தொடங்கியது. எய்டன் மார்க்ரம் போன்ற பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர் பந்தை வீசியவுடன், இஷான் கிஷன் ஆவேசமாக பேட்டைச் சுழற்றி தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி வலது கை ஆஃப் ஸ்பின்னர்களிடம் 12 விக்கெட்டுகளை இழந்துள்ளது. எய்டன் மார்க்ரம், ஆரியன் தத், சல்மான் அலி ஆகா என இவர்கள் அனைவரும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, வீரர்களின் கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணம்.
நெருக்கடியான நேரங்களில் நிலைத்து நின்று ஆடக்கூடிய திலக் வர்மா, மார்கோ யான்சன் பந்துவீச்சில் அவசரப்பட்டு விக்கெட்டை விட்டார். இது குறித்து விமர்சித்த கவாஸ்கர், ஒரு விக்கெட் விழுந்த நிலையில் திலக் வர்மா நிதானமாக ஆடி பவர் பிளேயில் 50 அல்லது 55 ரன்களை எட்டி ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மறுபுறம் தொடர் சறுக்கலில் உள்ள அபிஷேக் சர்மா 12 பந்துகளைச் சந்தித்து 15 ரன்கள் எடுத்தார். ஒருமுறை கூட அவர் பந்தைக் கீழ்நோக்கி அடிக்கவோ அல்லது சிங்கிள் எடுத்து நெருக்கடியைக் குறைக்கவோ முயற்சிக்கவில்லை. பவர் பிளேயில் இந்திய அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
விக்கெட் சரிந்த நிலையில் அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியாவை களமிறக்காமல், வலது மற்றும் இடது கை பேட்டிங் காம்பினேஷனைத் தக்கவைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வாஷிங்டன் சுந்தர் ஐந்தாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இந்தத் திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரேம்ப் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவும் நிதானம் இன்றி சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதிகபட்சமாக சிவம் துபே மட்டுமே 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.5 ஓவர்களில் இந்திய அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டி முடிந்த பின் இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் பேசுகையில், இந்தத் தொடரில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் தவறுகள் செய்துள்ளதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த இந்தத் தோல்வியால் இந்தியாவின் நெட் ரன் ரேட் மைனஸ் 3.800 ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. அரையிறுதிக்கு முன்னேற இந்திய அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அத்துடன் தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் இந்திய அணிக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.