ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம்சாட்டும் அவரது ரசிகர்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் என்று வர்ணிக்கப்படும் டோணி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்தது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இந்த சந்தேகம் டோணி ரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

டோணியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில், டோணி ரசிகர் மன்றம் இயங்கிவருகிறது. அந்த மன்றத்தினர் ராஞ்சியில் நேற்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ரசிகர் மன்றத்தின் தலைவரான, ஜிதேர்ந்திர சிங் நிருபர்களிடம் கூறுகையில், டெஸ்ட், ஒன்டே, டி20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு வந்தவர் டோணி. அப்படியிருக்கும்போது திடீரென அவர் ஓய்வு பெற்றுள்ளதை எங்களால் நம்ப முடியவில்லை. இந்த முடிவின் பின்னணியில் சதித் திட்டம் உள்ளது.
டோணி தனது முடிவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். ராஞ்சிக்கும், ஜார்கண்ட்டுக்கும் பெயர் வாங்கி தந்தவர் டோணி. எனவே நாங்கள் போராடுகிறோம் என்றார்.