பாலக்கலே: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் உள்ளிட்டோரு சமமான பவுலிங் வரிசையை இந்திய அணியும் வைத்துள்ளது. இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் எந்தவொரு அணியையும் எளிதாக பிரஷர் செய்யும் வல்லமை கொண்ட வீரர்களாக இருந்தனர். இதனால் நீண்ட மாதங்களுக்கு பின் இவர்கள் மூவரும் ஒரே போட்டியில் ஆடுவதை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஏனென்றால் பும்ராவின் எக்ஸ் பேக்டர், ஷமியின் சீம் மற்றும் சிராஜ் ஸ்விங் என்று மூன்று வகையான பந்துவீச்சிற்கு எதிராக பாகிஸ்தான் அணி எப்படி தாக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் முகமது ஷமி ஓய்வில் இருந்தார். ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு தயாராக ஓய்வெடுத்தார். இதனால் ஷமியின் பந்துவீச்சு மீதான எதிர்பார்ப்பு எகிறியது. பந்தின் சீமை பிடித்து ஷமி வீசினால், உலகின் எந்த பேட்ஸ்மேனும் ஆட்டம் காண்பார்கள்.
அந்த அளவிற்கு ஷமியின் பவர் பிளே ஓவர்களின் தாக்கல் இருந்தது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணி இறுதிப்போட்டி வரை வந்ததற்கு கூட ஷமியின் பவர் பிளே பவுலிங்கும் காரணம். இதனால் பும்ரா - ஷமியின் பவர் பிளே ஓவர்களை பாகிஸ்தான் அணி எப்படி சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமியை நீக்கி ஷர்துல் தாக்கூரை சேர்த்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரோகித் சர்மா.
இதனால் ரோகித் சர்மாவின் முடிவை பலரும் விமர்சித்து வருகின்றனர். நீண்ட பேட்டிங் வரிசை தேவை என்பதை விடவும், தரமான பந்துவீச்சாளர்களும் அணியில் இருந்தால் தான் வெற்றிபெற முடியும் என்று விவாதித்து வருகின்றனர். அதேபோல் 7 பேட்ஸ்மேன்களால் செய்ய முடியாதததை 8வது பேட்ஸ்மேனால் மட்டும் எப்படி செய்ய முடியும் என்றும், பந்துவீச்சாளர்களால் மட்டுமே தொடரை வென்று கொடுக்க முடியும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.