ராஜ்கோட் : விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தை திசை திருப்பும் வகையில் நடந்ததாகவும், அதனால் இரண்டு ஓவர்கள் கழித்து ஸ்டீவ் ஸ்மித் தன் விக்கெட்டை பறிகொடுத்ததாகவும் ரசிகர்கள் நம்ப முடியாத ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்ததாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பீல்டிங் செய்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 96 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு பலத்த அடி கொடுத்தனர்.
அவர்கள் ஆட்டமிழந்த பின்னும் களத்தில் நின்ற ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வந்தார். மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்த போது ஸ்டீவ் ஸ்மித் சோர்ந்து காணப்பட்டார். ராஜ்கோட் ஆடுகளத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது.
இதனை அடுத்து, ஸ்டீவ் ஸ்மித் அமர நாற்காலி ஒன்றை கொண்டு வந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். அந்த நாற்காலி கூட ஆஸ்திரேலிய அணியின் உடையை போல மஞ்சள் நிறத்தில் தான் இருந்தது. அந்த நாற்காலியில் ஸ்டீவ் ஸ்மித் அமர்ந்து கொண்டார்.
அவருக்கு சூடு தணிய தலையில் ஐஸ் வைத்து கொண்டு இருந்தார் ஆஸ்திரேலிய அணியின் பிசியோதெரபிஸ்ட். அப்போது மறுபுறம் லாபுஷேன் நின்று இருந்தார். விராட் கோலி அந்த இடத்துக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், திடீரென லாபுஷேன் இடம் சென்ற அவர் கோமாளி போல டான்ஸ் ஆடி ஏதோ சொல்லிவிட்டு வந்தார். அதை பார்க்கவே வேடிக்கையாக இருந்தது. ஆனால், அடுத்த இரண்டாவது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
உடனே ரசிகர்கள் சிலர், விராட் கோலி டான்ஸ் ஆடி ஸ்டீவ் ஸ்மித் கவனத்தை திசை திருப்பியதால் தான் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தார். கோலி ஒரு ஜீனியஸ் என்றெல்லாம் புகழத் துவங்கி விட்டனர். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலிக்கே வெளிச்சம். ஏன்பா கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?