
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வீரர்கள் கடந்த மே 19ம் தேதி முதல் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் குவாரண்டைனில் இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிசிசிஐ, இந்த நடவடிக்கையை எடுத்தது. 14 நாட்கள் பயோ பபுளில் இருந்த வீரர்கள் நேற்று இரவு தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டனர். இந்நிலையில் கேப்டன் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா குறித்த பிரச்சினை பெரிதாகியுள்ளது.

கோலியின் கோரிக்கை
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த 2021 ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டிருந்த அவர்கள், எங்கள் குழந்தை வாமிக்காவின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். சமீபத்தில் கூட ரசிகர் ஒருவர் வாமிகா குறித்து கேட்டதற்கு, தனது மகளை தற்போதைக்கு சமூக வலைதளங்களில் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

வாமிகா புகைப்படம்
இந்நிலையில் அவர்களின் கோரிக்கையையும் மீறி இன்று வாமிகா குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இந்திய வீரர்கள் புறப்பட்டனர். அப்போது அனுஷ்கா ஷர்மா தனது குழந்தையின் முகத்தை மறைத்தபடி தூக்கி சென்றார். எனினும் புகைப்பட கலைஞர்கள் பலர், வாமிகாவை புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில் வரிந்துக்கட்டிக்கொண்டு புகைப்படங்களை எடுத்து தள்ளினர்.

நெட்டிசன்கள்
இதனை இணையத்தில் பார்த்த ரசிகர்கள், புகைப்பட கலைஞர்களை விளாசி வருகின்றனர். மகளின் முகத்தை காட்டக்கூடாது என்ற ஒரு பெற்றோரின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள மாட்டீர்களா? உங்களை நினைத்து வெட்கப்படுகிறோம் எனத்தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் புகைப்படம் எடுத்தவர்கள் மனிதர்களே இல்லை என்பது போல சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications