அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான விஜய் ஹசாரே லீக் போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை பவர் பிளே ஓவர்களில் வீழ்த்தியது முக்கிய காரணமாக அமைந்தது.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சையத் முஷ்டாக் அலி தொடருக்கு பின், தற்போது விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சி-யில் இடம்பெற்றிருந்த வலிமை வாய்ந்த மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அபிஷேக் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் மும்பை அணி தரப்பில் ரகுவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ரகுவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரேவும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் விக்கெட் கீப்பர் ஹர்திக் டாமூர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் மும்பை அணியை மீட்டெடுக்கும் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் - சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் கொடுக்கப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் அர்ஷ்தீப் சிங் வீசிய 5வது ஓவரில் டக் அவுட்டாகி நடையை கட்டினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் மும்பை அணி 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் வந்த சிவம் துபே 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, இளம் வீரரான சூர்யன்ஷ் ஷெக்கே 44 ரன்களும், அன்கோல்கர் 66 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 43 ரன்களும் எடுத்து மும்பை அணியை மீட்டெடுத்தனர். இதனால் மும்பை அணி இறுதியாக 48.5 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரன் சிங் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் அதிரடியில் பொளந்து கட்ட, முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவிக்கப்பட்டது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த அன்மோல்ப்ரீத் சிங் 6 ரன்களில் நடையை கட்டினார்.
இதன்பின் பிரப்சிம்ரன் சிங் - ரமன்தீப் சிங் இருவரும் இணைந்து 29 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து, பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தனர். சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 101 பந்துகளில் 10 சிக்ஸ், 14 பவுண்டரிகள் உட்பட 150 ரன்களை விளாசி அசத்தினார். இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் பவுலிங் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் இவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.