பாலக்கலே: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும், இந்திய அணியின் பேட்டிங்கில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி 4 ரன்களிலும், ரோகித் சர்மா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பவுலரான பும்ரா, கடைசி நேரத்தில் களமிறங்கி 16 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணியின் 3வது அதிகபட்ச ரன் சேர்த்த வீரராக உருவானார். இதனை சுப்ரமணியபுரம் படத்தில் டும்கான், "இந்த கால் வச்சுக்கிட்டு நானே உழைக்கனும்னு நினைக்கும் போது, உங்களுக்குலாம் என்னடா கேடு" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "ஆஸ்பத்திரில இருந்து வந்து நானே ரன் அடிக்கனும்னு நினைக்கும் போது உங்களுக்கு என்னடா கேடு" என்று பும்ரா விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை கேள்வி கேட்பது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி 150 ரன்களை கடப்பதே சிரமம் என்று பார்க்கப்பட்ட நிலையில், திடீரென வந்த இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா இணை 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் மூலம் சவாலான இலக்கையும் நிர்ணயிக்க முடிந்தது. அதனை ஜெயிலர் படத்தில் ரஜினி "3வது ஒருத்தன் இருப்பான் பாரு" என்று சொல்வார். அப்போது சிவராஜ் குமார் வருவார். அதனை மாற்றி, "அங்க 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப் வருவாங்க பாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் மரண மாஸ்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் பந்து கடந்து சென்ற பின், போல்டாவதை பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் வெளியானது. இது கிட்டத்தட்ட சென்னை -28 படத்தில் சிவா முதல் பந்தில் ஆட்டமிழப்பதை போல் இருந்தது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதாக கிண்டல் செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரே போல் விக்கெட்டாகி இருப்பது சிரிப்பை ஏற்படுத்தியது. இந்த இரு புகைப்படங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட மீம் வேற மாதிரி வேற மாதிரி ஃபன்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பாகிஸ்தான் பவுலர்களிடம் பெட்டிப்பாம்பாக அடங்கினார்கள். ஆனால் பாக்கெட் டைனமோ இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 81 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார். இதனை சார்பட்டா பரம்பரை படத்தில் தோல்வியடைந்து வெளியில் வரும் வேம்புலியிடம் டான்ஸிங் ரோஸ், "இன்னிக்கு ஆடின பாரு.. இதுதான் ஆட்டம்" என்று பாராட்டுவார். அதனை அப்படியே மாற்றி, அன்னிக்கு 200 அடிச்சியே.. அது இல்ல ஆட்டம்.. இன்னிக்கு ஆடுன பாரு இதான் ஆட்டம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்ட மீம் மிரட்டல்.

நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் ஷார்ட் பாலில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை The Art என்றும் அவருக்கு ஷார்ட் பால் பிரச்சனையை கண்டறிந்த மெக்கல்லத்தை The Artist என்றும் விமர்சித்து உருவாக்கப்பட்ட மீம் ரசிகர்களின் குமுறல்.
