உலக சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்.. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ரெக்கார்டு
கராச்சி: சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத ஒரு மிரட்டலான சாதனையை பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனா படைத்துள்ளார். ஆண்கள் கிரிக்கெட்டில் கூட அரிதாக நிகழும் ஒரு சம்பவத்தை, நிகழ்த்திக் காட்டி அசத்தி இருக்கிறார் பாத்திமா சனா.
பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டன் பாத்திமா சனா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளாக அடித்த பாத்திமா, வெறும் 15 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். இதன் மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

முறியடிக்கப்பட்ட சாதனைகள்
இதற்கு முன்னதாக இந்தியாவின் ரிச்சா கோஷ், நியூசிலாந்தின் சோபி டிவைன் மற்றும் ஆஸ்திரேலியாவின் போப் லிட்ச்பீல்ட் ஆகியோர் 18 பந்துகளில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை பாத்திமா சனா தவிடுபொடியாக்கியுள்ளார்.
ஆட்டத்தின் 17-வது ஓவரில் களம் புகுந்த பாத்திமா, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். குட்சாய் சிகோரா வீசிய ஓவரில் வரிசையாக 4 பவுண்டரிகளையும், சிபாண்டா வீசிய ஓவரில் 4, 4, 6, 6, 4 என ஒரே ஓவரில் 24 ரன்களையும் விளாசினார். இறுதியில் 19 பந்துகளைச் சந்தித்த அவர் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இது அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
பாகிஸ்தான் பிரம்மாண்ட வெற்றி
இந்த இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 17.1 ஓவர்களில் வெறும் 90 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
2026-ம் ஆண்டில் மட்டும் 5 இன்னிங்ஸ்களில் 229 ரன்கள் குவித்துள்ள பாத்திமா சனா, 206.30 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு அதிரடி கேப்டனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள பாத்திமா சனாவை பாகிஸ்தான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications