தனிமையை உணர்ந்துள்ளேன்... கடும் மன உளைச்சல்... இங்கிலாந்து தொடர் குறித்து மனம் திறந்த கோலி
சென்னை: இங்கிலாந்துடனான தொடரின் போது கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக விராட் கோலி மனம் திறந்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் தோற்றாலும் கோலியின் சிறந்த கேப்டன்சியால் 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
3வது டெஸ்ட் போட்டி அகமபாத்தில் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துடனான முந்தைய தொடரில், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் தயாராகி வருகின்றனர். போட்டி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் நிகோலஸ் மற்றும் கோலி உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்தான் போட்டிகளின் போது தான் எதிர்கொண்ட சவால்களை கோலி பகிர்ந்தார்.

மன உளைச்சல்
நிகழ்ச்சியில் பேசிய கோலி, கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் நான் மிக மோசமாக விளையாடினேன். என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை, ரன் எடுக்க முடியவில்லை என்பது மிக மோசமான உணர்வுகள் ஆகும் என தெரிவித்தார்.

கோலியின் தனிமை
அது போன்ற தருணத்தில் நான் துறை ரீதியாக பேச பலரும் உண்டு. இருப்பினும் மன உளைச்சலால் இந்த உலகத்தில் நான் மட்டும் தான் இருப்பது போன்ற தனிமையை உணர்ந்துள்ளேன். சிலர் சீக்கிரம் அதிலிருந்து வெளியே வருவார்கள், சிலருக்கு நீண்ட காலம் எடுக்கிறது. தன்னம்பிக்கைதான் அதற்கு மருந்து என கோலி தெரிவித்துள்ளார்.

கோலியின் கம்பேக்
கோலி தெரிவித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர், 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6, என்ற ரன்களை மட்டுமே எடுத்தார். இதற்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கோலி 692 ரன்கள் அடித்து கம்பேக் கொடுத்தார்.


Click it and Unblock the Notifications