கோவா: கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே செஸ் உலகக் கோப்பை 2025 தொடரில், உலக சாம்பியனும், இந்திய செஸ்ஸின் முன்னணி வீரருமான டி. குகேஷ் மூன்றாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். இது செஸ் உலகில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பை தொடரில் சனிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற மூன்றாவது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், உலகின் 85-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஃப்ரெட்ரிக் ஸ்வான்டம், வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ் தோல்வியைத் தழுவினார்.
முதல் ஆட்டத்தைக் கருப்புக் காய்களுடன் சமன் செய்திருந்த குகேஷ், இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஆடினார். ஆனால், கடுமையான நேர நெருக்கடியிலும் அபாரமாக விளையாடிய ஸ்வான், குகேஷுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், குதிரை மற்றும் சிப்பாய் இருந்த நிலையில், குகேஷின் சிப்பாய் அமைப்பு அவருக்குச் சாதகமாக இல்லாததால், தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய செஸ்ஸின் முதன்மை வீரராக கருதப்படும் குகேஷ், எட்டு சுற்றுகள் கொண்ட நாக்-அவுட் தொடரின் மூன்றாவது சுற்றிலேயே வெளியேறியது, செஸ் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
2024-ல் உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு, 2025-ம் ஆண்டு சவால்கள் நிறைந்ததாகவே அமைந்துள்ளது. உலகின் இளம் வயது உலக சாம்பியன் என்ற அழுத்தத்துடன் இந்த ஆண்டில் களமிறங்கிய அவர், பல போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருந்தது.
டாடா ஸ்டீல் செஸ் 2025: இந்தப் போட்டியில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டாலும், பிளிட்ஸ் டை-பிரேக்கரில் வெற்றியை நழுவவிட்டார்.
நார்வே செஸ் 2025: மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராகத் தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பதிவு செய்தாலும், தொடரில் மூன்றாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
FIDE கிராண்ட் ஸ்விஸ் 2025: சமர்கண்டில் நடந்த இந்தப் போட்டியில், அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினார்.
குகேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தாலும், மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ராபர்ட் ஹோவன்னிஸ்யானை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். அவருடன், அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் பிரணவ் ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தம் 10 இந்தியர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், விதித் குஜ்ராத்தி, கார்த்திக் வெங்கட்ராமன் மற்றும் நாராயணன் ஆகியோர் தங்களது போட்டிகளைச் சமன் செய்துள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் டை-பிரேக்கரில் விளையாட உள்ளனர்.