மும்பை: இந்தியாவுக்கு கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்று தந்த, கபில்தேவ் தலைமையிலான அணியின் வெற்றி குறித்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் கேப்டன் கபில்தேவாக, ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
1983ல் வெஸ்ட் இன்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்றவை உலக கிரிக்கெட்டில் கோலாச்சி கொண்டிருந்த காலம். உலகக் கோப்பை போட்டிக்கு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி சென்றபோது, இவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும், எதிர் அணிக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கபில்தேவ் அணி ஏற்படுத்தியது. பல திருப்பங்கள் நிறைந்த அந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் வெற்றி, வெள்ளித் திரைக்கு வர உள்ளது.
இதில் கபில்தேவாக நடிக்கப் போவது, பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்,. தற்போது வரலாற்றின் ஒரு பகுதியான பத்மாவதி படத்தில் நடித்து வரும் ரன்வீர் சிங், அடுத்ததாக, கபில் அவதாரம் எடுக்க உள்ளார்.
இந்தப் படத்தை கபிர் கான் இயக்க உள்ளார். படத்துக்காக, கதை, திரைக்கதை அனைத்தும் தயாராக உள்ளது. அந்த உலகக் கோப்பை போட்டியை பார்க்க முடியாதவர்கள், 1983 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பார்க்கத் தயாராகுங்கள். தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் சஞ்சய் பூரான் சிங் சவுகான், இந்தப் படத்துக்கான கதையை எழுதியுள்ளார்.