லண்டன்: வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் வென்று 2001ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய அணி கோப்பையுடன் நாடு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 3வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றது. 4வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கான சூழல் இருந்த போது, மழை பெய்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதனால் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றாலும், தொடரில் 2-2 என்று சமனில் முடிவடையும். ஆஷஸ் தொடர் சமனில் முடிவடைந்தால், வெளிநாட்டு அணியே கோப்பையை எடுத்து செல்லும். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது. இருப்பினும் 5வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனென்றால் 5வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி வெல்லவில்லை என்றால் அந்த அணிக்கு இது தன்மானப் பிரச்சனையாக மாறிவிடும். அதேபோல் இங்கிலாந்து அணி வெற்றிபெறவில்லை என்றால், பேஸ் பால் திட்டத்தை ஆஸ்திரேலிய அணி மொத்தமாக சுக்குநூறாக உடைத்துவிட்டதாக இங்கிலாந்து பத்திரிக்கைகளே தலைப்பிட்டு செய்தி எழுதுவர்.
இதனால் 5வது டெஸ்ட் போட்டி கோப்பைக்காக மட்டுமல்லாமல், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய தருணமாக இரு அணிகளுக்கும் மாறியுள்ளது. இந்தப் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து அணி தரப்பில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். ஏனென்றால் 4வது ஆஷஸ் போட்டியில் சிறப்பாக அனைத்து காம்பினேஷன்களும் அமைந்துள்ளதால், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மாற்றம் செய்ய மாட்டார் என்றே பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் க்ரீன் சொதப்புவதால் ஆஸ்திரேலிய அணி ஏராளமான முறை பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் அவருக்கு பதிலாக டாட் மர்ஃபி களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.