மிகப்பெரிய விஷயம்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என்று உலகின் மிக முக்கியமான வலிமையான அணிகளை பின்னுக்குத் தள்ளி, இந்திய அணி பைனலுக்கு முன்னேறி இருப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. இதற்காக பல டெஸ்ட் தொடர்களில் விளையாடி, புள்ளிகளை சேகரித்து, இந்த இடத்திற்கு வந்துள்ளது இந்திய அணி. இதில், குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இரண்டு போட்டிகளில் வென்று தொடரைக் கைப்பற்றியது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
பிளேயிங் லெவன்
அதேபோல், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் விராட் கோலி அணி தோற்க, உலக டெஸ்ட் பைனலுக்கு முன்னேறுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அடுத்தடுத்து 3 போட்டிகளில் வென்று, இந்திய தொடரையும் கைப்பற்றி, இதோ, நாளைய இறுதிப் போட்டிக்கு தயாராகிவிட்டது. பிளேயிங் லெவன் இன்று ஏறக்குறைய அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் பயோ-பபுள்
ஐபிஎல் தொடர் பாதியிலேயே முடிந்ததால், எந்தவித கிரிக்கெட் தொடர்களும் இன்றி காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு, ஒரு மிகப்பெரிய ட்ரீட் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்றால் அது மிகையாகாது. ஏற்கனவே, ஐபிஎல் பயோ-பபுள் தோல்வி அடைந்ததால், மீண்டும் வீரர்களை மும்பையில் ஒருங்கிணைத்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தி, மீண்டும் இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்தியது பிசிசிஐ-க்கு பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால், எந்தவித சிக்கலும் இன்றி அணியை இறுதிப் போட்டிக்கு பத்திரமாக அழைத்து வந்திருக்கிறது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.
இந்திய அணியின் கைகளில்
ஒருவேளை இங்கிலாந்து டூருக்கான பயோ-பபுளில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு, முக்கிய வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், நிலைமை தலைகீழாகியிருக்கும். அப்படியே மீறி நடத்தினாலும், தொடரும் சுவாரஸ்யம் இல்லாமல், சவால் மிக்கதாக இல்லாமல் போயிருக்கும். அப்படிப்பட்ட கண்டங்களை எல்லாம் கடந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கதவை பிசிசிஐ வெற்றிகரமாக திறந்துவிட்டது. இனி, எல்லாம் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் கைகளில் தான் உள்ளது.