நிதி திரட்டும் போட்டி
‘Help for Heroes XI' மற்றும் ‘Rest of the World XI' அணிகள் நடுவே, வியாழக்கிழமை இரவு லண்டன், கியா ஓவல் மைதானத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.
ஜாம்பவான்கள்
ஓய்வு பெற்ற மற்றும் தற்போதைய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து ஆடினர். லாரா, கிப்ஸ், மேத்யூ ஹேடன், கிரீம் ஸ்மித், ஜெயவர்த்தனே, பிரண்டன் மெக்கல்லம், சேவாக், டோணி போன்றோர் இதில் முக்கிய வீரர்களாகும்.
களம் கண்ட சேவாக்
முதலில் பேட்டிங் செய்த ‘Rest of the World XI' அணி, 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ‘Help for Heroes XI' அணியில் தொடக்க வீரர்களாக சேவாக்கும், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டாசும் களமிறங்கி அடித்து ஆடினர்.
கடைசி நேர பரபரப்பு
சேவாக் 30 ரன்களிலும், ஸ்ட்ராஸ் 26 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற..., ஆஸி. மாஜி வீரர் டேமியன் மார்ட்டின் பின்னாலேயே நடையை கட்டினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிப்சுடன், டோணி ஜோடி சேர்ந்தார். ஆனால் அதிரடி வீரர் கிப்சும் கப்-சிப் என வெளியேற கடைசி பத்து ஓவர்களில் 82 ரன்கள் தேவை என்ற கடின நிலை இருந்தது.

டோணி அபாரம்
ஆனால், முழு பொறுப்பையும் தன் தோள் மீது எடுத்துக்கொண்ட டோணி, பவுண்டரிகள் விளாசியதுடன், அவ்வப்போது அபாரமாக ரன் ஓடுவதையும் நிறுத்தவில்லை. கடைசி ஓவரின் 3வது பந்தில் டோணி பவுண்டரி விளாச ‘Help for Heroes XI' அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது.

ஆட்ட நாயகன்
சிறப்பாக ஆடி 22 பந்துகளில் 38 ரன்களுடன் களத்தில் இருந்த டோணி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். கீப்பிங்கின்போதும், சிறப்பாக செயல்பட்டதற்காக, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 3ம் தேதி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், டோணியின் ஆட்டம், இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











