லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மழை தொடர்வதால், இன்று ஆட்டம் நடப்பதும் சந்தேகமே.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.
முதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், இந்தியா தோல்வியை சந்தித்தது.
கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. இங்கிலாந்தின் 20 விக்கெட்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். ஆனால், பேட்டிங்கில்தான் இந்திய அணி சொதப்பியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில் மழை பெய்யத் துவங்கியதால், ஆட்டம் துவங்குவது தாமதமானது.
மழை நிற்கும் என காத்திருந்து முன்னதாகவே உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை விடப்பட்டது. ஆனால், தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல், முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
லண்டனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுவதும் சந்தேகமே என தெரிகிறது.