டி20 தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் வரும் 12ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ்
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெறாதது பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் தனது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
வார்த்தைகள் இன்றி அழுகை
இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து முதலில் தான் தனது அம்மாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் விஷயத்தை கேள்விபட்டு அவர் அழுதுவிட்டதாகவும் சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார். ஸ்போர்ட்ஸ் டுடேவிற்காக பேசிய சூர்யகுமார் யாதவ், பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி தன்னுடைய அம்மா தவித்ததாகவும் தெரிவித்தார்.
விஷயங்களை கற்க ஆர்வம்
தொடர்ந்து தன்னுடைய தந்தை, சகோதரி உள்ளிட்டவர்களுடன் க்ரூப் காலில் தான் பேசியதாகவும் தான் இந்திய அணியில் இணைந்தது அவர்கள் அனைவரையும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியதாகவும் யாதவ் மேலும் கூறினார். இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டவர்களிடம் அதிகமான விஷயங்களை கற்க தான் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.