டெல்லி: இந்தாண்டு மார்ச் மாதம் ஒருதினப் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது.
நேபாளம் கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு மார்ச் மாதம் ஒருதினப் போட்டிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட நெதர்லாந்து சென்றுள்ளது.
முதல் ஒருதினப் போட்டியில் நெதர்லாந்து வென்றது. இரண்டாவது ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று, முதல் வெற்றியை நேபாளம் பெற்றது.
முதலில் விளையாடிய நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.
Nepal seal their first ODI win by the slimmest of margins! A one-run victory!
— ICC (@ICC) August 3, 2018
Captain Paras Khadka defends five off the last after the 10th wicket had added 30. An unbelieveable game, and what a moment for Nepal!#NEDvNEP SCORE 👇 https://t.co/hiBJZ67jpN pic.twitter.com/Fv2938NyhH
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற, தொடர் டிராவானது. ஒருதினப் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது போட்டியிலேயே வெற்றி பெற்றுள்ளது நேபாளம். ஐபிஎல்லில் விளையாடிய நேபாளத்தின் சந்தீப் லாமிச்சனே 3 விக்கெட்களையும், லலித் பண்டாரி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.