கொல்கத்தா: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்து இருக்கிறது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் போட்டி சீக்கிரமாகவே முடிக்கப்பட்டது.
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இந்த போட்டி டிசம்பர் மாத இறுதி வரை நடக்க இருக்கிறது.

இலங்கை இந்திய மண்ணில் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றதில்லை. இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் 7 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டி நடக்கிறது. எனவே இன்று நடக்கும் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.
ஆனால் கொல்கத்தா மைதானத்தில் காலையில் இருந்து மிதமான மழை பெய்து வந்தது. நேற்று அங்கு பெய்த மழை காரணமாக நிறைய தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் பாதி போட்டி மொத்தமாக கைவிடப்பட்டது. 9.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய போட்டி உணவு இடைவேளைக்கு பின் 1.45 மணிக்கு தொடங்கியது.
இதில் இலங்கை அணி டாஸ் வென்று, பந்து வீசி வந்தது. இந்த போட்டி இரண்டு முறை மழையால் குறுக்கிடப்பட்டது. கடைசியில் முதல் நாள் போட்டி போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சீக்கிரமாகவே முடிக்கப்பட்டது.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்து இருக்கிறது. கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். தவான் 8 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். கோஹ்லியும் டக் அவுட் ஆனார்.