அப்படியே நாக்பூர் "பிட்ச்" மாதிரியே இருந்துச்சுடா பரமா... இது குக்!
நாட்டிங்காம்: இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் இரு தரப்பும் விளையாடியதை விட அந்தப் போட்டிக்காக போடப்பட்ட பிட்ச்தான் இப்போது அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது. காரணம், சப்பையான பிட்ச் ஆக அது மாறிப் போனதுதான். இதனால் ஆளாளுக்கு ரன் குவித்து அதகளப்படுத்தி விட்டனர்.
இந்த நிலையில், நாட்டிங்காமில் போடப்பட்ட பிட்ச்சைப் பார்த்தபோது, 2012ம் ஆண்டு இந்தியா போயிருந்தபோது நாக்பூரில் போடப்பட்ட பிட்ச் மாதிரியே தனக்குத் தெரிந்ததாக இங்கிலாந்து கேப்டன் ஆலிஸ்டர் குக் கூறியுள்ளார்.
நாட்டிங்காம் போட்டி டிராவில் முடிந்த நிலையில் டோணியும், குக்கும் பேட்டி அளித்துள்ளனர். குக் பேசியபோது பிட்ச் குறித்து விலாவாரியாகப் பேசினார்.

இந்தியாவுக்கு பரம பொருத்தமான பிட்ச்
நாட்டிங்காம் பிட்ச் அப்படியே இந்தியர்களுக்குப் பொருத்தமாக இருந்தது. அவர்களுக்காகவே போடப்பட்டது போன்று இருந்தது. இதுவும் இந்தியா அதிகம் ரன் குவிக்க ஒரு காரணம்.

நாக்பூர் பிட்ச் போல
2012ல் நாக்பூரில் நடந்த போட்டியின்போது இருந்த பிட்ச் போலவே இதுவும் இருந்தது. அப்போது நாங்கள் நான்கு வேகப் பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினோம்.

என்னத்தச் சொல்ல
இதற்கு மேல் இந்த பிட்ச் குறித்து ஆய்வு செய்ய நான் விரும்பவில்லை. அதற்கு மேல் என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

வேகம் இருந்திருக்க வேண்டும்
ஒவ்வொரு பிட்ச்சும் ஒரு வகையான தனித்துவம் கொண்டதாக உள்ளது. ஆனால் பிட்ச்சில் சற்று வேகம் இருக்க வேண்டும். பந்து பவுன்ஸ் ஆக வேண்டும். அது இதில் இல்லை.

ரன் குவிக்காமல் வேறு என்ன செய்ய
இரு அணிகளுமே பேட்டிங்கில் சிறப்பாக விளங்க இந்த பிட்ச்சும் ஒரு காரணம். இரு அணிகளிலுமே 10வது விக்கெட்டுக்கு பெருமளவில் ரன் குவிக்கப்பட்டது உயிர்ப்பில்லாத பிட்ச் இது என்பதற்கு நல்ல ஆதாரம்.

ஆனால் நாங்களும் சொதப்பினோம்
எங்களது பேட்டிங்கின்போது நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 130 ரன்களுக்கு மேல் இருந்தோம். திடீரென அது 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களில் இருந்தோம். அது ஏமாற்றத்தை அளித்தது.

யாரயைும் குறை சொல்ல விரும்பவில்லை
எங்களது அணியில் யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. காரணம் இது இங்கிலாந்துக்கான வழக்கமான பிட்ச்சே இல்லை. அப்படி இருக்கையில் போட்டி முடிவும் இப்படித்தான் அமையும் என்றார் குக்.


Click it and Unblock the Notifications