
தப்பான தீர்ப்புகள்
இதனால் இந்திய அணிக்கு 176 ரன்களை டார்கெட்டாக நிர்ணயிக்கும் அளவுக்கு இலங்கை முன்னேறியது. இதற்கு நடுவே பல முறை தினேஷ் சண்டிமால், திரிமன்னே அவுட் ஆகினர் என்றால் நம்ப முடிகிறதா. நடுவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால் இவ்விருவரும் எப்போதோ பெட்டியை கட்டி பெவிலியன் திரும்பியிருக்க வேண்டும்.

சண்டிமால் கேட்ச்
உதாரணத்துக்கு சிலவற்றை பாருங்கள். தினேஷ் சண்டிமால் அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்தபோது அது பேட்டில்பட்டு ஹெல்மெட்டிலும் உரசியபடி சென்று கேட்ச் ஆனது, நடுவர் ஆக்சன்போர்ட் அதை நாட்-அவுட் என்றார். டிவி ரீப்ளேயில் பேட்டில் பந்து பட்டுச் சென்றது தெளிவாகத் தெரிந்தது.

திரிமன்னே எளிதான அவுட்
இதற்கு அடுத்த ஓவரிலேயே திரிமன்னே எளிதான ஒரு அவுட்டில் இருந்து நடுவரால் தப்பினார். அமித் மிஸ்ரா பந்தில் பேட்டின் உள் விளிம்பில் பந்துபட்டு சில்லி பாயிண்டில் கேட்ச் ஆனது. ஆனால் அவுட் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இலங்கைக்கு ஆதரவு
இதேபோல மிஸ்ரா வீசிய பந்தை சண்டிமால் அடுத்து ஆடியபோது பந்து சிலி மிட் ஆஃப் பீல்டர் பூட்ஸில் பட்டு எழும்பியது. அதை மிஸ்ராவே கேட்ச் பிடித்தார். இம்முறை, 3வது நடுவரின் பரிசீலனைக்குவிடப்பட்டது. பந்து பூட்சில் பட்டதா அல்லது, தரையிலும் உரசியதா என்பதை நெடுநேரம் நடுவர் ஆய்வு செய்தார். தரையில் பட்டதற்கான உறுதியான காட்சிகள் இல்லை என்றபோதிலும், பேட்ஸ்மேனுக்கே சாதகமாக முடிவு வெளியானது.

அசிங்கம்
தவறான முடிவுகளை பயன்படுத்திக்கொண்டு இந்த இரு பேட்ஸ்மேன்களும்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். பேட்டில் பந்து பட்டு கேட்ச் ஆவது, பிறரைவிட பேட்ஸ்மேனுக்குத்தான் நன்கு தெரியும். இருப்பினும் மிக எளிதான அவுட்டுகளையும், நடுவர் மறுத்த காரணத்துக்காக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். எதுவுமே நடக்காதது போல முக பாவனையை வைத்துக் கொண்டு, அவர்கள் பேட் செய்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி, விளையாட்டின் மீது பற்று கொண்ட பொது ரசிகர்களும் ஆதங்கப்படவே செய்தனர்.

கோஹ்லி அவுட்டில் குழப்பம்
ஆனால், இன்று இந்தியா பேட்டிங் செய்தபோது நிலைமை அப்படியே தலைகீழானது. 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இக்கட்டான நேரத்தில் கேப்டன் கோஹ்லி களமிறங்கினார். மூன்றே ரன்கள் எடுத்திருந்த நிலையில், தரிந்து குஷால் வீசிய பந்தை அவர் லெக்சைடில் ஃபிளிக் செய்ய முயன்றபோது, பந்து தரையோடு தாழ்ந்து லெக்சைடில் நின்றிருந்த குஷால் சில்வாவிடம் பிடிபட்டது. அது பேட்டில் பட்டதா, கால் பேடில் பட்டதா என்பதை எளிதாக கணிக்கமுடியவில்லை.

முன்மாதிரி கோஹ்லி
ஆனால், கேட்ச் பிடித்த இலங்கை வீரர்கள் உற்சாக கோஷமிட்டனர். நடுவரோ அசையவில்லை. அவுட் இல்லை என்பதைபோல நின்றிருந்தார். ஆனால், கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்பதை மட்டும் சரியாக பார்த்துக் கொண்ட கோஹ்லி, நடுவரே கையை உயர்த்தாதபோதும், நடையை கட்டினார். இதன்பிறகே, நடுவர் கையை உயர்த்தி அவுட் என்று உறுதி செய்தார்.

நாணயமில்லா இலங்கை
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும், நடுவர் அவுட் தராவிட்டாலும் வெளியேறி விடுவது வழக்கம். ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கில்கிறிஸ்டும் இந்த விஷயத்தில் ஜென்டில்மேன். இதுபோன்ற குணாதிசியங்களால்தான், அவர்கள் உயரமான இடங்களை எட்டிப்பிடித்தனர். ஆனால், ஒரு வெற்றிக்காக இலங்கை வீரர்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை மறந்து அதை மரிக்கச் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











