திருவெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் காஞ்சி அணியை 116 ரன்களுக்கு சுருட்டிய கோவை 102 ரன்களுக்கு சுருண்டது. இதனால் காஞ்சி அணிக்கு இந்த சீசனில் முதல் வெற்றி கிடைத்தது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் விளையாடிய விபி காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் பாபா அபராஜித் 41, எஸ். அருண் 29 ரன்கள் எடுத்தனர். கோவை அணியின் அஜித் ராம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கோவையின் அஸ்வின் வெங்கட்ராமன் 35, எம்.பி.ராஜேஷ் 21 ரன்கள் எடுத்தனர்.
காஞ்சி அணியில் தீபக் லிங்கேஷைத் தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்கள் கொடுப்பதை கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார். திவாகர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் காஞ்சி அணி 14 ரன்களில் அபாரமாக வென்றது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், காஞ்சி அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.