அதிகாரிகள், தலைவர்கள் மோதல்
டெல்லியில் நடைபெற்ற மாநில கிரிக்கெட் சங்கமான டிடிசிஏ ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் இடையில் ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பட்ஸ்மேன் அறிவிப்பு
விசாரணை அதிகாரியாக நீதிபதி தீபக் வர்மாவை நியமித்துள்ளதாக டிடிசிஏயின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அதன் புதிய தலைவர் ஜனவரி 13ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
கவுதம் கம்பீர் டிவீட்
டிடிசிஏ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதும், அதை சிலர் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்வு குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பதிவிட்டு வருத்தம் தெரிவித்தார்.
பிசிசிஐக்கு கோரிக்கை
உறுப்பினர்களின் இந்த கேவலமான நடத்தையால் டிடிசிஏவின் மதிப்பு குலைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த கம்பீர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் போர்டு செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தலையிட்டு இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் கோரிக்கை விடுத்தார்.
|
கம்பீர் கோரிக்கை
இந்த அடிதடியில் ஈடுபட்டு டிடிசிஏவின் மாண்பை குலைத்தவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் கம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
|
டிடிசிஏ டிவீட்
இதனிடையே, இந்த சம்பவம் குறித்த எந்த குறிப்பும் இல்லாமல், ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு டிடிசிஏ நன்றி தெரிவித்தது.
இயக்குநரின் சமாளிப்பு
இந்நிலையில், ஆண்டு பொதுக்கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில வாக்குவாதங்கள் நடைபெற்றதாகவும் ஆனால், குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை என்றும் டிடிசிஏவின் இயக்குநர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.