லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பல்வேறு போட்டிகள் மழை காரணமாக தடைப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் தான் இந்த பிரச்சனை என்றால் பாகிஸ்தானில் ஒரு சூப்பர் பிரச்சனை அரங்கேறியது.
மழையே பெய்யாமல் லாகூரில் வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் அரை மணி நேரம் வரை தடைப்பட்டது. பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரை தங்களது சொந்த மண்ணில் நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது .மேலும் பெட்ரோல், டீசல் மின்சாரம் என அனைத்துமே அந்த நாடு தடுமாறி வருகிறது. இந்த நிலையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மைதானத்தில் உள்ள மின்விளக்குகள் அணைந்தது. இதனால் பாகிஸ்தான அணி ஐந்து ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் தடைப்பட்டது.
இதனால் வங்கதேச அணி வீரர்கள் மைதானத்தை நோக்கி சென்றார்கள். இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மழை பெய்து ஆட்டம் தடை ப்பட்டது என்று சொன்னால் கூட அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உயர் கோபுர மின்விளக்குகள் பழுதானது நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து மைதான ஊழியர்கள் மின்விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 20முதல் 30 நிமிடம் வரை போட்டி நடத்தப்படாமல் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த நேரத்தில் பெவிலியன் செல்லாமல் நடுவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்த நிலையில் ஒதுக்கப்பட்ட நான்கு போட்டிகளில் கூட ஒழுங்காக நடத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இருப்பதாக பலரும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்த சூழல் பாகிஸ்தானுக்கு நிச்சயம் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.