லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதல்முறையாக டாஸ் வென்றதை நம்ப முடியாமல் நடுவர்களிடம் கேலியாக பேசிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 4 ஆஷஸ் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது. இதனால் கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியும், 22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையை வென்று செல்ல ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த நிலையில் இதுவரை முடிவடைந்த 4 ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸே டாஸ் வென்று அசத்தினார். இதனால் 5வது போட்டியில் யார் டாஸ் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அதுமட்டுமல்லாமல் சூழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், டாஸ் வெல்லும் அணிக்கு கூடுதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருந்தன. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் காயினை சுண்டிய நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் டெய்ல்ஸ் என்று கூறினார்.
இதையடுத்து டாஸை ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் பெரும் கரகோஷம் எழுந்தது. இதையடுத்து கம்மின்ஸ் பேசுகையில், டாஸ் போடப்பட்ட காயினை இரு முறை பரிசோதிக்க வேண்டும். இந்தத் தொடரில் முதல்முறையாக டாஸ் வெல்கிறோம். பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். கொஞ்சம் வானம் மேகமூட்டமாக இருப்பதால், பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் கேமரூன் க்ரீன் நீக்கப்பட்டு டாட் மஃபிர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், நாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம். இங்கு நாங்கள் ஒவ்வொரு முறையும் டாஸ் வென்ற போதும் பந்துவீச்சையே தேர்வு செய்திருக்கிறோம். ஆஸ்திரேலிய அணிக்கு ஆஷஸ் கோப்பையை வென்று நாடு திரும்ப வேண்டும் என்று களமிறங்கி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தொடரை சமன் செய்வதற்காக களமிறங்கி இருக்கிறோம். அதனால் இன்னும் எங்களின் ஆட்டம் முடியவில்லை என்று தெரிவித்தார்.