ரிக்கி பாண்டிங்கின் செல்ல பெயர்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அந்த அணியின் உலக கோப்பை வெற்றிகளுக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர். அணியில் தான் கேப்டனாக இருந்தபோது அணியை சிறப்பாக வழிநடத்திய ரிக்கி பாண்டிங், தற்போது பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். கேப்டனாக 67.91 சதவிகித வெற்றிகளை இவர் தன்னுடைய அணிக்காக ஏற்படுத்தித் தந்துள்ளார்.
கேள்விகளுக்கு பதிலளித்த பாண்டிங்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் என தன்னை எப்போதும் தொடர்ந்து பிசியாக வைத்துக் கொள்பவர். ஆயினும் சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் குறித்த தன்னுடைய கருத்துக்களை சொல்ல இவர் தவறுவதில்லை. இந்நிலையில் டிவிட்டர் தளத்தின்மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு ரிக்கி பாண்டிங் பதிலளித்தார்.
|
ரசிகரின் கேள்விக்கு பதில்
இந்த உரையாடலின்போது புன்டர் என்ற அவரின் செல்லப்பெயரை அவருக்கு வைத்தது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், சக வீரர் ஷேன் வார்னேதான் தனக்கு அந்த பெயரை வைத்தது என்ற ரகசியத்தை போட்டுடைத்தார். கடந்த 1990ல் கிரிக்கெட் அகாடமியில் தான் இருந்தபோது தனக்கு கிடைக்கும் சொற்ப உதவித்தொகையையும் நாய் பந்தயத்திற்காக தான் செலவிட்டதால் இந்த பெயர் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ரிக்கி பாண்டிங் நற்சான்று
தொடர்ந்து இந்திய வீரர் ரிஷப் பந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், ரிஷப் பந்த் மிகவும் திறமையானவர் என்றும், அவர் தன்னுடைய திறமையை நிரூபித்து கூடிய விரைவிலேயே அணியில் மீண்டும் இடம்பெறுவார் என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அவருடன் ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இணைந்து செயல்படும் தருணத்திற்காக தான் காத்திருப்பதாகவும் ரிக்கி பாண்டிங் மேலும் தெரிவித்தார்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்தாத ரிஷப்
இந்திய அணியில் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடிவந்த ரிஷப் பந்த், அதிகமான சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டும் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட தவறிவிட்டார். இதையடுத்து தற்போது ரிஷப் பந்திற்கு பதிலாக கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்திற்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச டி20 தொடரில் கே.எல். ராகுல், அருமையாக விளையாடி பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார்.