மும்பை: 2020 இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் போது இந்திய வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தோம் என ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் டிம் பெயின் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது முற்றிலும் பொய் என அந்த தொடரில் பங்கேற்ற இந்திய வீரர் ஷர்துல் தாக்குர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
2020இல் கொரோனா காலகட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றது. அதில் இந்தியா 2 - 1 என வெற்றி பெற்று வரலாற்று சாதனை நிகழ்த்தியது. முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அப்போது, கொரோனா லாக் டவுன் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்திய வீரர்களுக்கு சில சலுகைகள் செய்யுமாறு பிசிசிஐ கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிடம் கேட்டுக் கொண்டது. ஆனால், இந்திய அணி முதலில் சென்று தரை இறங்கிய குயின்ஸ்லாந்து மாகாணத்தின் அரசு இந்திய வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது.
அப்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில், இந்திய வீரர்களுக்காக 10 நாட்களாக அதை குறைத்துக் கொள்ளுமாறு பிசிசிஐ கேட்டது. அதற்கு ஒப்புக் கொள்ள மறுத்த குயின்ஸ்லாந்து அரசு நிர்வாகம் முதல் ஐந்து நாட்களுக்கு இந்திய வீரர்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்ய மறுத்து விட்டது.
மேலும், அந்த தொடர் முழுவதும் இது போன்ற சிக்கல்களை இந்திய வீரர்கள் எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தவே இது போன்ற வேலைகளை ஆஸ்திரேலியா செய்கிறது என இந்திய வீரர்கள் கோபம் கொண்டனர். ஆனால், டிம் பெய்ன் அதற்கு நேர்மாறாக கூறி இருந்தார்.
டிம் பெய்ன் பேச்சு குறித்து ஷர்துல் தாக்குர் பேசிய போது, "2020 ஆஸ்திரேலிய தொடரில் எங்களை மிக மோசமாக நடத்தினார்கள். முதல் நான்கு, ஐந்து நாட்களுக்கு எங்களுக்கு உதவி செய்ய பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. ஹோட்டல் அறையில் ஒரு படுக்கை உறையை மாற்ற வேண்டும் என்றால் நாங்கள் ஐந்து மாடி ஏறிச் சென்று அதை எடுத்து வர வேண்டும். நாங்கள் சோர்வாக இருந்தாலும் அதை நாங்களே தான் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது." என்றார்.
மேலும், "சமீபத்தில் டிம் பெய்ன் அளித்த பேட்டி குறித்து கேள்விப்பட்டேன். அது முற்றிலும் பொய். ஊடகத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் இவ்வாறு கூறி இருக்கிறார். "நாங்கள் இந்திய அணிக்கு எந்த அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்கள் என்ன கேட்டார்களோ அதை எல்லாம் செய்து கொடுத்தோம்". என்று கூறி இருக்கிறார். ஆனால், உண்மை என்ன என்று எனக்கு தெரியும். அப்போது விராட் கோலி இல்லை. அஜின்க்யா ரஹானே மற்றும் ரவி சாஸ்திரி கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புடன் தொடர்ந்து சண்டையிட்டு எங்களுக்கு வேண்டிய விஷயங்களை செய்து தந்தனர்" என்றார் ஷர்துல் தாக்குர்.