லக்னோ: ஐபிஎல் தொடரில் தொடர்ந்து இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
"சாண்ட்பேப்பர்" சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக இருந்த ஆஸ்திரேலிய அணியை ஒருங்கிணைத்து மீண்டும் உச்சாணி கொம்பிற்கு அழைத்து சென்றவர் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து முன்னேற்றியவர். இதனால் கேரி கிறிஸ்டனுக்கு பின் முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவராக மாறினார்.

இருப்பினும் ஐபிஎல் அணிகள் ஜஸ்டின் லாங்கரை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ அணி தொடர்ந்து இரு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தாலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் சென்றடைய முடியவில்லை.
இதனால் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை மாற்ற லக்னோ அணி ஆலோசித்து வந்தது. குறிப்பாக கவுதம் கம்பீருக்கு இணையான ஆக்ரோஷமிக்க பயிற்சியாளரை தேடி வந்தது. இந்த நிலையில் லக்னோ அணி ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர் ஜஸ்டின் லாங்கர் பெயரை கூறியுள்ளார். இவர்கள் இருவருக்கும் பல ஆண்டு காலமாக நட்பு இருந்து வந்தது. குறிப்பாக கவுதம் கம்பீர் வெளிநாடுகளில் விளையாடுகையில், லாங்கரிடம் அதிகளவு தொடர்பில் இருந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இருவருமே ஆக்ரோஷமிக்க குணமுள்ளவர்கள் என்பதால், லக்னோ அணியின் மனநிலையை மாற்ற சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இரு நாட்களுக்கு முன் லக்னோ அணியின் நிர்வாகிகள், லண்டனில் உள்ள ஜஸ்டின் லாங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நண்பர்கள் இருவரும் இணைந்து அடுத்த சீசனில் லக்னோ அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.