சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில், ஒரே ஓவரை 18 பந்துகளாக வீசி, கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த ஒரு ஓவர், அவர் மீது மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக சந்தேகப்பட வைத்து இருக்கிறது. மேலும், ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) வரை விசாரணைக்கு அழைத்துச் சென்று இருக்கிறது.
இது குறித்து தனது மன வேதனையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மெசேஜ் அனுப்பி அவரை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். தற்போது, அந்த கோரமான அனுபவம் குறித்து ஹேஸ்டிங்ஸ் மௌனம் கலைத்துள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL 2025) தொடரில், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், ஜான் ஹேஸ்டிங்ஸ் வீசிய ஒரு ஓவர், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான ஓவராக அமைந்தது.
அந்த ஓவரில் அவர் வீசிய 18 பந்துகளில், வெறும் 5 பந்துகள் மட்டுமே சரியான டெலிவரிகளாகும். மற்றவை அனைத்தும் வைடுகள் மற்றும் நோ-பால்கள். இந்த ஒரே ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கினார் ஹேஸ்டிங்ஸ். இறுதியில், பாகிஸ்தான் அணி 70 பந்துகளுக்கு மேல் மீதமிருந்த நிலையில், 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த மோசமான ஓவர், உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவின் கவனத்தை ஈர்த்தது. போட்டிக்குப் பிறகு, ஊழல் தடுப்பு அதிகாரிகள் தன்னை அணுகி விசாரணை நடத்தியதாக ஜான் ஹேஸ்டிங்ஸ் ஒரு பாட்காஸ்டில் கூறியுள்ளார்.
"ஊழல் தடுப்பு அதிகாரிகள் என்னிடம் வந்து, 'நேற்று இரவு எங்களை ஒரு வழி பண்ணிவிட்டீர்கள். நாங்கள் இதை விசாரித்தாக வேண்டும். உங்கள் பந்துகளில் ஒன்று பிட்ச்சிலேயே படவில்லை' என்றனர். அதற்கு நான், 'நான் மேட்ச் ஃபிக்சிங் செய்வதாக நினைக்கிறீர்களா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இல்லை, ஆனால் நீங்கள் கடந்த ஏழு வருடங்களாக எங்கே இருந்தீர்கள், என்ன செய்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது' என்றனர். நான், 'நான் ஊழல்வாதி இல்லை' என்று பதிலளித்தேன்," என அந்த மோசமான அனுபவத்தை ஜான் ஹேஸ்டிங்ஸ் பகிர்ந்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜான் ஹேஸ்டிங்ஸ் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். பாகிஸ்தான் போட்டி முடிந்த உடனேயே, தனது சமூக வலைதளக் கணக்குகளை மூன்று நாட்களுக்கு மூடிவிட்டதாக அவர் கூறினார்.
"இதை விளக்குவது கடினம். கிரிக்கெட் வட்டாரத்திலிருந்து எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்தன. ஆனால், பாகிஸ்தான் போட்டி முடிந்ததும் நான் சமூக வலைதளங்களை டெலீட் செய்துவிட்டேன். அதை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை. என் இன்ஸ்டாகிராமில் எனக்கு மெசேஜ் செய்த 15 லட்சம் பேருக்கும், என்னால் முடிந்தபோது பதிலளிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
இந்த அவமானகரமான ஓவருக்குப் பிறகு, ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணியில் இருந்த அவரது சக அணி வீரர்களே அவருக்கு "அதிகாரப்பூர்வ ஓய்வு விழா" நடத்தியதாக ஹேஸ்டிங்ஸ் வேதனையுடன் குறிப்பிட்டார். அந்தப் படுதோல்விக்குப் பிறகும், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஹேஸ்டிங்ஸ் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
இது வேடிக்கையான விஷயம் இல்லை என்றும், அந்த நேரத்தில் பந்துவீசும்போது என்ன நடக்கிறது என்பதை விளக்க முடியாது என்றும், அது தனக்கு மிகவும் தர்மசங்கடமாகவும், பயங்கரமாகவும் இருந்தது என்றும் ஜான் ஹேஸ்டிங்ஸ் எவ்வாறு தான் 18 பந்துகளை வீசினேன் என்று கூறியுள்ளார். ஒரு சாதாரண லெஜண்ட்ஸ் போட்டி, ஒரு வீரரின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு ஜான் ஹேஸ்டிங்ஸின் அனுபவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.